Monday, July 27, 2009

கதவுகளுக்கு வெளியே

கதவுகளுக்கு முன்னால்
தயக்கத்துடன் நிற்கிறேன்
எப்போதும்

நிராகரிப்பின் மீதான பயம்
இழுத்துப்பிடித்து நிறுத்துகிறது
தட்டப்போகும் கைகளை

வழிநெடுகக் கதவுகளைச்
செய்துவைத்து
கைகொட்டிச் சிரிக்கிறீர்கள்
நீங்கள்

திறப்பதைவிட
உடைப்பதே சிறந்தது
என்றெனக்குப் புரியும்
ஒரு நன்னாளில்
உங்கள் ஆதிக்கமுகங்கள்
நொறுங்கிச் சிதைவது பார்த்து
தற்கொலை செய்துகொள்ளவும்
கூடும் நீங்கள்

அத்தைரியத்தின் வேர்கள்
என்னுள் கிளைத்துப் பரவும் வரை
பட்ட மரமென நின்றிருப்பேன்
உங்கள் கதவுகளின் முன்

பின்குறிப்பு : இதுவும் இப்பொழுது எழுதியதன்று. இன்னொரு வகை சுயபுலம்பல் இது. சிலருக்குப் பிடிக்கலாம். பலருக்குப் பிடிக்காமல் போகலாம். உடலிலிருந்து கழிவுகளை வெளியேற்றிய பிறகு கிடைப்பதான சுதந்திர உணர்வு, இது போன்ற எண்ணங்களை எழுதிய பிறகும் கிடைக்கிறது என்பது மட்டும் உண்மை

13 comments:

  1. கவிதை நன்றாக உள்ளது. என் jackpoem.blogspot.com வருகை தாருங்கள். உங்களிடமிருந்து வருகின்ற கருத்துகள் என்னை மென்மேலும் வளர்க்கும் என்பதை மறவாதீர்கள்.

    நன்றி...

    ReplyDelete
  2. சேரல்,
    கவிதை நன்றாக இருக்கிறது.
    000
    அறைந்து மூடப்படும் கதவுகளுக்கு என்ன தெரியும்
    வெளியே காத்து நிற்பவர்
    துயரம் பற்றி.
    000
    என்ற எனது நண்பர் கல்யாணராமன் எழுதிய கவிதையை நினைவூட்டியது.


    “அகநாழிகை“
    பொன்.வாசுதேவன்

    ReplyDelete
  3. //உங்கள் ஆதிக்கமுகங்கள்
    நொறுங்கிச் சிதைவது பார்த்து
    தற்கொலை செய்துகொள்ளவும்
    கூடும் நீங்கள்//

    இதற்கு பின்னால் உள்ள சம்பவம் எனக்கு தெரிய வேண்டியதில்லை, ஆனால் அந்த வலியை உணருகிறேன் நண்பா.

    கிட்டத்தட்ட இதே சிந்தனை அடிப்படையில் இன்றுதான் நானும் ஒரு கவிதை எழுதிவைத்தேன் . இன்னும் போஸ்ட் செய்யவில்லை.

    //பலருக்குப் பிடிக்காமல் போகலாம். உடலிலிருந்து கழிவுகளை வெளியேற்றிய பிறகு கிடைப்பதான சுதந்திர உணர்வு, இது போன்ற எண்ணங்களை எழுதிய பிறகும் கிடைக்கிறது என்பது மட்டும் உண்மை//

    உண்மை.

    ReplyDelete
  4. சேரல்

    வலியினை எழுதி முடித்தபின் பிதுக்கிய
    தோட்டாவின் ஆசுவாசம் நேர்வது எனக்கும் உண்டு
    நல்ல கவிதை

    ReplyDelete
  5. //வழிநெடுகக் கதவுகளைச்
    செய்துவைத்து
    கைகொட்டிச் சிரிக்கிறீர்கள்
    நீங்கள்//
    எனக்கு ரொம்ப அணுக்கமாய் இருக்கிறது இக்கவிதை.

    ஆம்மாம்? எதற்கு ஒவ்வொரு கவிதையையும் justify செய்கிறீர்கள்?
    Rose is a rose is a rose is a rose.
    உங்கள் தயக்கங்களை உடைத்து வெளியே வாருங்களேன்!

    ReplyDelete
  6. வலி.
    கவிதை நன்று

    ReplyDelete
  7. ரொம்ப நல்லா இருக்கு சேரல்.

    ReplyDelete
  8. நன்றி ஜகதீஸ்வரன்

    நன்றி அகநாழிகை

    நன்றி நாடோடி இலக்கியன்

    நன்றி நேசமித்ரன்

    நன்றி விதூஷ்,
    எனக்கென்று ஒரு பாசக்கார நட்பு வட்டம் இருக்கிறது. இந்தக் கவிதைகளைப் படித்துவிட்டு, என்னடா ஆச்சு உனக்கு என்று ஓடி வந்துவிடும் ஒரு கூட்டம். அவர்களுக்காகத்தான் இத்தனை விளக்கமும் :)

    நன்றி நந்தா
    இப்பொழுதெல்லாம் என்னை மிகவும் அசத்தி விடுகிறீர்கள் :)

    நன்றி முத்துராமலிங்கம்

    நன்றி யாத்ரா

    -ப்ரியமுடன்
    சேரல்

    ReplyDelete
  9. என்னே ஒரு வலி பாருங்களேன். அருமை சேரல்

    ReplyDelete
  10. // நிராகரிப்பின் மீதான பயம்
    இழுத்துப்பிடித்து நிறுத்துகிறது
    தட்டப்போகும் கைகளை //

    நல்லாருக்கு

    - ப்ரியமுடன்
    பிரவின்ஸ்கா

    ReplyDelete
  11. உண்மையில் இது புலம்பல் இல்லை,சேரல்.பூரணம்!அவ்வளவு அழகாய் இருக்கிறது...

    ReplyDelete