Friday, November 26, 2010

சிறிது

சுமந்து நடந்து வந்த
குவளையிலிருந்து
விழுந்து தெறித்தது பால்
துடைத்துப் போனாள்
கீழே சிறகு விரித்துக் கிடந்த
ராட்சசப் பறவையை

-----------------------

ஆடைகளற்ற கொடியில்
தொங்கும் கிளிப்புகளில்
துளித்துளியாய்
ஒழுகியூற்றும்
நனை மழையும்
காய் வெயிலும்

-----------------------

ஆயிரத்துக்கும் அதிகமான
பக்கங்கள் கொண்ட
புத்தகத்தின் ஏடுகளைக் கிழித்து
வரிசை மாற்றியடுக்கி
வாசித்துப் பார்த்தேன்

பக்கங்கள் தோறும்
முளை விடத் தொடங்கின
ஆயிரமாயிரம் நூதனக் கதைகள்

-----------------------

மழையோ வெயிலோ
அறியாமல்
புறவுலகின்
இயல்பனைத்தும் துறந்து
ஒரு துறவியெனச் சிரிக்கிறாள்
பொன் நகைகள்
சுமந்து நிற்கும்
விளம்பர யுவதி

-----------------------

அசையும் பொருளுடன்
அசையும் நிழலை
ஒற்றைப்புள்ளியில்
ஒருமிக்கச் செய்யும்
முயற்சியிலென்
நெற்றிப்புள்ளியில்
பற்றியெரிகிறது ஞானத்தீ

-----------------------

இருள்
மெல்ல பரவ
மங்கி மறையும் சூரியனை
விடைகொடுத்தனுப்புகிறேன்


இனியதை,
மேற்கத்திய
தேசத்தவனொருவன்
தன் வானத்தில்
பொருத்தி வைத்திருப்பான்
நாளையென்
அதிகாலை வரை

-----------------------

பால் தீர்ந்த
பிளாஸ்டிக் பைகளை
நக்கி யோய்கின்றன
பசித்த கன்றுகள்

-----------------------

பாலைவனங்களில்
அதிகாலைப் பனித்துளிகளைச் சேகரித்து
தாகம் தீர்த்துக்கொள்ளும்
பூர்வகுடி பற்றிய குறிப்புகளுள்
அனுமதி ஏதுமின்றி
வந்தமர்ந்து கொள்கிறது
நடந்து கால் வலி கண்ட
ஒட்டகமொன்று

-----------------------

ஒட்டு மொத்தப் பிரபஞ்சத்தின்
ஒரு நாள் சரித்திரத்தைத்
தாங்கியபடி
குப்பையில் சேர்கிறது
நாட்காட்டியின்
ஒற்றை இதழ்

-----------------------

நாய்களை விட்டுவிடுங்கள்
அவை மனிதரின் கலவியில்
கல்லெறிவதில்லை

8 comments:

  1. கன்று, நாய் - வரிகள் சாட்டையடிகள்..!

    கொஞ்சம் துறவு, கொஞ்சம் மழலையின் வியப்பு, கொஞ்சம் ஆச்சர்யம்..

    நிறைய "அட".. அருமை!

    ReplyDelete
  2. நல்லாயிருக்குங்க சேரல்

    ReplyDelete
  3. //

    இருள்
    மெல்ல பரவ
    மங்கி மறையும் சூரியனை
    விடைகொடுத்தனுப்புகிறேன்


    இனியதை,
    மேற்கத்திய
    தேசத்தவனொருவன்
    தன் வானத்தில்
    பொருத்தி வைத்திருப்பான்
    நாளையென்
    அதிகாலை வரை

    //

    இது மட்டும் எனக்குப் பிடித்தது

    ReplyDelete
  4. தங்கள் கருத்துகளுக்கு நன்றி நண்பர்களே!

    -ப்ரியமுடன்
    சேரல்

    ReplyDelete
  5. //நாய்களை விட்டுவிடுங்கள்
    அவை மனிதரின் கலவியில்
    கல்லெறிவதில்லை //
    செருப்படிங்க!

    ReplyDelete