புத்தகம்

புத்தகங்கள் பற்றிய பார்வைகளைப் பதியும் எங்கள் வலைப்பூ - http://puththakam.blogspot.com/

Friday, July 31, 2009

மண்ணியல்

விளைநிலத்தின் மீதேறி
வளர்ந்து செல்கிறது
மேலே மேலே உயரும்
கட்டிடத்தின்
நிழல்

படிந்த வரிகள் - 8

நாளைக்கும் இது வேண்டுமென்ற
வேட்கை
வாழ்க்கையை
அப்படியே வாழச் சொல்கிறது
-கவிஞர் மகுடேசுவரன்
(காமக்கடும்புனல்)

Tuesday, July 28, 2009

நனைப்பதை நனைப்பவன்

யார்யாரையோ மெழுகிய காற்று
என்னையும் மெழுகிப் போகிறது

யார்யாரையோ நனைத்த அலை
என்னையும் நனைத்துப் போகிறது

யார்யார் மீதோ படிந்த உப்பு
என் மீதும் கரிக்கிறது

யார் யார் கண்களிலோ விழுந்து
நினைவுக்குள் சிக்குண்ட துளி
எனக்குள்ளும் விழுந்து
தொலைந்து போகிறது

இந்த வரிகளைப்
பாடிக்கொண்டிருப்பவனைப்
பார்க்க நேர்ந்தால் சொல்லுங்கள்
அந்த யாரோவில்
நானும் ஒருவன் என்று

-கடலை நனைப்பவன்

Monday, July 27, 2009

கதவுகளுக்கு வெளியே

கதவுகளுக்கு முன்னால்
தயக்கத்துடன் நிற்கிறேன்
எப்போதும்

நிராகரிப்பின் மீதான பயம்
இழுத்துப்பிடித்து நிறுத்துகிறது
தட்டப்போகும் கைகளை

வழிநெடுகக் கதவுகளைச்
செய்துவைத்து
கைகொட்டிச் சிரிக்கிறீர்கள்
நீங்கள்

திறப்பதைவிட
உடைப்பதே சிறந்தது
என்றெனக்குப் புரியும்
ஒரு நன்னாளில்
உங்கள் ஆதிக்கமுகங்கள்
நொறுங்கிச் சிதைவது பார்த்து
தற்கொலை செய்துகொள்ளவும்
கூடும் நீங்கள்

அத்தைரியத்தின் வேர்கள்
என்னுள் கிளைத்துப் பரவும் வரை
பட்ட மரமென நின்றிருப்பேன்
உங்கள் கதவுகளின் முன்

பின்குறிப்பு : இதுவும் இப்பொழுது எழுதியதன்று. இன்னொரு வகை சுயபுலம்பல் இது. சிலருக்குப் பிடிக்கலாம். பலருக்குப் பிடிக்காமல் போகலாம். உடலிலிருந்து கழிவுகளை வெளியேற்றிய பிறகு கிடைப்பதான சுதந்திர உணர்வு, இது போன்ற எண்ணங்களை எழுதிய பிறகும் கிடைக்கிறது என்பது மட்டும் உண்மை

Tuesday, July 21, 2009

நிராகரித்தவன்

உங்கள் அழைப்புகளை
மறுதலிக்கிறேன்

உங்கள் போலியான
புன்னகைகளுக்குக்
கருப்பு வர்ணம் பூசுகிறேன்

மிட்டாய் தின்ற சிறுவனின்
வாய் போல் பிசுபிசுக்கும்
உங்கள் நினைவுகளை
அழுத்தி அழிக்கிறேன்

எதிர்பாராமல்
எதிர்ப்பட்டுவிடுவீர்களோ
என்ற அச்சத்தில்
உங்கள் வீதிகளைக்
கவனமாகத் தவிர்க்கிறேன்

நட்பு வேண்டியதாய்க்
காட்டிக்கொள்ளும்
உங்கள் கடைசி
உபாயங்களை
உடைத்தெறிகிறேன்

சிதிலமாகிப்போன
நம் நட்பு கணங்களின் மேல்
உங்கள் கல்லறைகளை
எழுப்பிக்கொண்டிருக்கிறேன்

நம்மில் இருந்த
உங்களை மட்டும்
பூரணமாய்ப் பிய்த்தெறிகிறேன்

என் நிராகரிப்பின்
எந்தவொரு வலியுமற்று
எங்கேயோ சிரித்துக் கொண்டுதான்
இருக்கிறீர்கள் நீங்கள்

நிராகரித்துவிட்ட
வலி பொறுக்காமல்
உங்களுக்காகவும் சேர்ந்து
இப்படித்தான் அழுதுகொண்டிருக்கிறோம்
நானும் என் பேனாவும்


பின்குறிப்பு : இது இப்பொழுது எழுதியதன்று; விரக்தியின் அலைகள் அடிக்கும் கரையில் உப்புக்காற்றில் எழுதி வைத்தது. இன்னும் பிசுபிசுப்பு மீதமிருக்கிறது.