Tuesday, January 03, 2012

எழு(த்)து

எழுதாமல் இருப்பதைப் பற்றிய குற்ற உணர்வு சமீப காலமாகவே என்னை அதிகமாக ஆட்கொண்டிருக்கிறது. நான் எழுதுவதனால் என்ன ஆகிவிடப் போகிறது? எழுதாமல் இருப்பதனால்தான் என்ன ஆகி விடப் போகிறது? ஒன்றும் புரியவில்லை. எழுத வேண்டுமென்கிற ஆசை மட்டும் விட மாட்டேனென்கிறது.

எழுதுவதைப் பழக்கமாகக் கொள்ள வேண்டும் என்கிறார் ஓர் அனுபவம் வாய்ந்த எழுத்தாளர். ஒரு வருடத்துக்குப் பெரிய பட்டியல் போட்டுக் கொண்டு படிக்கவும் எழுதவும் செய்கிறவர் அவர். அலுவலக வேலை போல இப்படிச் செய்ய என்னால் இயலவில்லை. தினமும் நேரம் ஒதுக்கிக்கொண்டு எதையாவது எழுது என்கிறார். அன்றாட செலவுக்கணக்குகளைத் தாண்டி என்னால் எதையும் தினமும் எழுத முடிவதில்லை; அதிலும் ஒன்றிரண்டு விட்டுப் போகிறது.

எழுதும் பழக்கத்தை ஊக்கப் படுத்துவதற்காக ஒரு வலைத்தளம் உண்டென்றும், நண்பர்களுடன் இணைந்து கொண்டு போட்டி போட்டு எழுத வேண்டும் என்றும் சொன்னான் நண்பனொருவன். ஒரு நாளுக்குள் 750 வார்த்தைகள் (www.750words.com) எழுத வேண்டுமாம். தெரிந்த வார்த்தைகளை எல்லாம் ஒரு முறை எழுதி வைத்தாலும் இரண்டு மூன்று நாட்களுக்குப் பிறகு தலையைச் சொறிய வேண்டியது தான் போலிருக்கிறது. 

பேச்சைக் குறைத்தால் ஒருவேளை நிறைய எழுதலாமோ என்கிற அசட்டுத் தனமான முயற்சியும் மனைவியின் சந்தேகப் பார்வையால் தோல்வியுற்றது. குடும்பஸ்தனாக, அதிலும் தகப்பனாக எழுத நேரம் கிடைப்பதே அரிதாகி விட்டதாகக் காரணம் சொல்லிக் கொள்ள முடிந்தாலும், எழுதும் நேரத்தில் தூளியில் அழும் மகளைத் தூங்கச்செய்ய இடைவேளை தேடிக் கொண்டாலும் எழுத மீதமிருக்கிறது இன்னும் நிறைய.

இப்படி எதையாவது எழுதுவதற்கு உருப்படியாக எதையாவது எழுதிவிடலாம் தானே!

4 comments:

  1. கடந்த இரண்டு வருடங்களாக இருந்த என் மன ஓட்டத்தை அப்படியே பிரதிபலித்து விட்டீர்கள்!

    ReplyDelete
  2. எழுத அமர்ந்த பின், நடந்தவைகளை நினைவிற்கு கொண்டுவர முயற்சித்தல்; காட்சி நிகழும் பொழுதே ஒரிரு வரிகள் குறிப்பு எடுத்து, பின் சாகவாசமாய் எழுத அமர்தல். இரண்டு வழிகளையும் முயன்று விட்டாயா, நண்பா?

    ReplyDelete
  3. ethayume thunithu ezuthuvathilthaan sirappu.Yosanai solluvathu elithu.

    ReplyDelete
  4. Boss, Post pannama neraya vechurupeengale athayaachum post pannunga. apurama thannala ezhutha aarambichuduveenga

    ReplyDelete