புத்தகம்

புத்தகங்கள் பற்றிய பார்வைகளைப் பதியும் எங்கள் வலைப்பூ - http://puththakam.blogspot.com/

Tuesday, July 21, 2009

நிராகரித்தவன்

உங்கள் அழைப்புகளை
மறுதலிக்கிறேன்

உங்கள் போலியான
புன்னகைகளுக்குக்
கருப்பு வர்ணம் பூசுகிறேன்

மிட்டாய் தின்ற சிறுவனின்
வாய் போல் பிசுபிசுக்கும்
உங்கள் நினைவுகளை
அழுத்தி அழிக்கிறேன்

எதிர்பாராமல்
எதிர்ப்பட்டுவிடுவீர்களோ
என்ற அச்சத்தில்
உங்கள் வீதிகளைக்
கவனமாகத் தவிர்க்கிறேன்

நட்பு வேண்டியதாய்க்
காட்டிக்கொள்ளும்
உங்கள் கடைசி
உபாயங்களை
உடைத்தெறிகிறேன்

சிதிலமாகிப்போன
நம் நட்பு கணங்களின் மேல்
உங்கள் கல்லறைகளை
எழுப்பிக்கொண்டிருக்கிறேன்

நம்மில் இருந்த
உங்களை மட்டும்
பூரணமாய்ப் பிய்த்தெறிகிறேன்

என் நிராகரிப்பின்
எந்தவொரு வலியுமற்று
எங்கேயோ சிரித்துக் கொண்டுதான்
இருக்கிறீர்கள் நீங்கள்

நிராகரித்துவிட்ட
வலி பொறுக்காமல்
உங்களுக்காகவும் சேர்ந்து
இப்படித்தான் அழுதுகொண்டிருக்கிறோம்
நானும் என் பேனாவும்


பின்குறிப்பு : இது இப்பொழுது எழுதியதன்று; விரக்தியின் அலைகள் அடிக்கும் கரையில் உப்புக்காற்றில் எழுதி வைத்தது. இன்னும் பிசுபிசுப்பு மீதமிருக்கிறது.

17 comments:

நாடோடி இலக்கியன் said...

//என் நிராகரிப்பின்
எந்தவொரு வலியுமற்று
எங்கேயோ சிரித்துக் கொண்டுதான்
இருக்கிறீர்கள் நீங்கள்//

no words to say.
excellent seral.

ny said...

//உப்புக்காற்றில் எழுதி//

:)

நேசமித்ரன் said...

Wow
arumai !

ஆ.சுதா said...

மிக நல்ல கவிதை.
நிராகரிப்பின் வலியும் அதற்கான வழியும் எழுத்தில் வழிந்தோடுகின்றது.

நந்தாகுமாரன் said...

இதற்கு பெயர் தான் போட்டுடைத்தல் (கட்டுடைத்தல் அல்ல) கவிதை

Venkatesh Kumaravel said...

//நம்மில் இருந்த
உங்களை மட்டும்
பூரணமாய்ப் பிய்த்தெறிகிறேன்//
க்ளிஷே.
மற்றபடி ஒன்றும் குறை சொல்வதற்கில்லை. வழக்கமான பஞ் இல்லை. ஒருவேளை தொடர்ச்சியான உங்களது அண்மை வீச்சில் இருக்க இது கொஞ்சம் ஔட் ஆஃப் ப்ளேஸில் இருக்கிறதா? இல்லை எனக்கு தான் இன்று ஏதோ டுமீலாயிருச்சா?

Vidhoosh said...

Superb! Simply Superb.

யாத்ரா said...

ஐயோ வலியை அப்படியே பதிவு செய்திருக்கிறீர்கள் சேரல், அருமையான கவிதை.

நட்புடன் ஜமால் said...

இன்னும் பிசுபிசுப்பு மீதமிருக்கிறது.]]


இது மேலும் வளுவூட்டுகிறது.

சேரலாதன் பாலசுப்பிரமணியன் said...

@நாடோடி இலக்கியன்,
நன்றி!

@kartin,
:(

நன்றி நேசமித்ரன்

நன்றி முத்துராமலிங்கம்

@Nundhaa,
சரி விடுங்க. எல்லாம் நடக்கறதுதான்.

@வெங்கிராஜா,
உங்களுக்கு எதுவும் ஆகவில்லை. இது தான் கொஞ்சம் பழசு. அதைவிட, தனிப்பட்ட உணர்வு ஒன்றைச் சொல்லும்போது, அதன் ஆழம் தெரிந்தவர்கள், அனுபவப்பட்டவர்களுக்கு இயல்பாகப் போய் அது மனதில் உட்கார்ந்துகொள்ளும். அந்த வகையில் நீங்கள் அதிர்ஷ்டசாலி தான் போல. மேலும், இது நிராகரிக்கப்பட்டவனின் வார்த்தகளல்ல; நிராகரித்தவனின் வார்த்தைகள்.

@Vidhoosh,
நன்றி!

நன்றி யாத்ரா

நன்றி ஜமால்

-ப்ரியமுடன்
சேரல்

மண்குதிரை said...

சேரல் நல்லா சொல்லியிருக்கீங்க. அருமை

ச.முத்துவேல் said...

நல்லாயிருக்குது சேரல்.

Unknown said...

பொதுவாக நிராகரிக்கப்பட்டவன் புலம்புவான், நிராகரித்தவர் புலம்புவது வித்யாசமாக உள்ளது. எளிமையான வார்த்தைகளை உபயோகித்திருப்பதால் சுலபமாக வாசிக்க முடிந்தது.

உங்க கவிதை நல்லா இருக்கு சேரல்.

பிரவின்ஸ்கா said...

ரொம்ப நல்லாருக்கு சேரல்.

- ப்ரியமுடன்
பிரவின்ஸ்கா

நந்தாகுமாரன் said...

அட நல்லாயிருக்குன்னு சொன்னேங்க :)

சேரலாதன் பாலசுப்பிரமணியன் said...

நன்றி மண்குதிரை!

நன்றி முத்துவேல்!

நன்றி கிருஷ்ண பிரபு!

நன்றி பிரவின்ஸ்கா!

நன்றி நந்தா :) நீங்கள் சொன்னது புரிந்தது :)

-ப்ரியமுடன்
சேரல்

பா.ராஜாராம் said...

//நிராகரித்து விட்ட
வலி பொறுக்காமல்
உங்களுக்காகவும் சேர்ந்து
இப்படித்தான் அழுது கொண்டிருக்கிறோம்
நானும் எனது பேனாவும்//

இன்னும் கூட நிராகரிக்கவில்லை சேரல் நீங்கள்.
அழுகையில்... நிராகரிப்பின் இயலாமையே இந்த
கவிதையின் உச்சம் அல்லது நெகிழ்வு...fantaastic சேரலாதன்!
(பிரியம் மிகும் போது என் மகனையும் இப்படியே முழு பெயரிட்டு அழைப்பேன்)