புத்தகம்

புத்தகங்கள் பற்றிய பார்வைகளைப் பதியும் எங்கள் வலைப்பூ - http://puththakam.blogspot.com/

Thursday, December 16, 2010

மக்கள் கலை இலக்கிய விழா

இவ்வாண்டும் மணல் வீடு சிற்றிதழும், களரி அமைப்பும் இணைந்து நடத்தும் மக்கள் கலை இலக்கிய விழா சிறப்புற நிகழவிருக்கிறது. அது குறித்த அறிவிப்பு கீழே.





-----------------------------------------------

நன்கொடைகள் வரவேற்கப்படுகின்றன. அளிக்க விரும்புவோர்,

ஆசிரியர், மணல்வீடு, ஏர்வாடி, குட்டப்பட்டி அஞ்சல், மேட்டூர், சேலம் - 636 453 என்ற முகவரிக்கு பணவிடை மூலமாகவோ,

கீழுள்ள வங்கி எண்ணுக்கு நேரடியாகவோ அளிக்கலாம்.

M.HARIKRISHNAN
INDIAN BANK,
MECHERI BRANCH,
SB A/C - 534323956

தொடர்புக்கு - மு.ஹரிகிருஷ்ணன், மணல்வீடு ஆசிரியர் (9894605371)

Friday, December 03, 2010

தலையெழுத்து

ஒரு கவிதையின் தலையெழுத்து
என்னவாகவும் ஆகலாம்

கொண்டாடப்படலாம்

கொளுத்தப்படலாம்

புறக்கணிக்கப்படலாம்

கவனமற்று மறக்கப்படலாம்

மீண்டும் கூட எழுதப்படலாம்

வேறோர் இடத்தில்
வேறொரு காலத்தில்
வேறொரு தளத்தில்
வேறொரு மொழியில்
வேறொரு மனதில்

Friday, November 26, 2010

சிறிது

சுமந்து நடந்து வந்த
குவளையிலிருந்து
விழுந்து தெறித்தது பால்
துடைத்துப் போனாள்
கீழே சிறகு விரித்துக் கிடந்த
ராட்சசப் பறவையை

-----------------------

ஆடைகளற்ற கொடியில்
தொங்கும் கிளிப்புகளில்
துளித்துளியாய்
ஒழுகியூற்றும்
நனை மழையும்
காய் வெயிலும்

-----------------------

ஆயிரத்துக்கும் அதிகமான
பக்கங்கள் கொண்ட
புத்தகத்தின் ஏடுகளைக் கிழித்து
வரிசை மாற்றியடுக்கி
வாசித்துப் பார்த்தேன்

பக்கங்கள் தோறும்
முளை விடத் தொடங்கின
ஆயிரமாயிரம் நூதனக் கதைகள்

-----------------------

மழையோ வெயிலோ
அறியாமல்
புறவுலகின்
இயல்பனைத்தும் துறந்து
ஒரு துறவியெனச் சிரிக்கிறாள்
பொன் நகைகள்
சுமந்து நிற்கும்
விளம்பர யுவதி

-----------------------

அசையும் பொருளுடன்
அசையும் நிழலை
ஒற்றைப்புள்ளியில்
ஒருமிக்கச் செய்யும்
முயற்சியிலென்
நெற்றிப்புள்ளியில்
பற்றியெரிகிறது ஞானத்தீ

-----------------------

இருள்
மெல்ல பரவ
மங்கி மறையும் சூரியனை
விடைகொடுத்தனுப்புகிறேன்


இனியதை,
மேற்கத்திய
தேசத்தவனொருவன்
தன் வானத்தில்
பொருத்தி வைத்திருப்பான்
நாளையென்
அதிகாலை வரை

-----------------------

பால் தீர்ந்த
பிளாஸ்டிக் பைகளை
நக்கி யோய்கின்றன
பசித்த கன்றுகள்

-----------------------

பாலைவனங்களில்
அதிகாலைப் பனித்துளிகளைச் சேகரித்து
தாகம் தீர்த்துக்கொள்ளும்
பூர்வகுடி பற்றிய குறிப்புகளுள்
அனுமதி ஏதுமின்றி
வந்தமர்ந்து கொள்கிறது
நடந்து கால் வலி கண்ட
ஒட்டகமொன்று

-----------------------

ஒட்டு மொத்தப் பிரபஞ்சத்தின்
ஒரு நாள் சரித்திரத்தைத்
தாங்கியபடி
குப்பையில் சேர்கிறது
நாட்காட்டியின்
ஒற்றை இதழ்

-----------------------

நாய்களை விட்டுவிடுங்கள்
அவை மனிதரின் கலவியில்
கல்லெறிவதில்லை

Tuesday, November 16, 2010

இழை

கூரிய வாட்களைக்
கிழித்துவிடும் இழையாய் இருக்கிறது.

அறுந்துவிடும் எனப்
பயங்கொள்கிறாய்

கிழிந்துவிட்ட வாட்களுக்காய்ப் பரிதவிக்கிறேன்
அவை வாட்களே என்றாலும்

உன் இழையை
எதிர்கொள்ளும் புள்ளிகளைத்
தவிர்க்கச் சொல்லித் தருகிறேனென் வாட்களுக்கு

இனி வாட்கள் வாட்களாகவே இருக்கும்,
வாட்களாக இருப்பதன்றி
வேறெதுவும் செய்யாது.

Thursday, October 28, 2010

காளமேகப்புலவர்

இரட்டை அர்த்தத்துக்கென்று தமிழிலக்கியத்தில் ஒரு தனி இடம் உண்டு. சிலேடை என்கிற பெயரில் வழங்கப்பட்ட இவ்வகை செய்யுள்கள் இன்றைய இரட்டை அர்த்தங்கள் போலல்லாமல், பா இயற்றுபவரின் திறமையையும், வாசிப்பவரின் அல்லது கேட்பவரின் திறமையையும் சோதிக்கும் ஒரு களமாக இருந்திருக்கின்றன. சிலேடைப் பாடல்களுக்கென்றே பெயர்பெற்றவர் காளமேகப்புலவர். இவரது பாடல் ஒன்றை பள்ளிக்காலத்தில் படித்த நினைவு.

சமீபத்தில் மணல்வீடு இதழில் தொடர்ந்து வெளிவந்து கொண்டிருக்கும் 'கெட்ட வார்த்தை பேசுவோம்' தொடரை வாசித்தேன். நெடுங்காலச் சமுதாய அமைப்புகளால் கெட்டது என்று ஒதுக்கப்பட்ட வார்த்தைப் பிரயோகங்கள் செய்யுள்களில் பயின்று வருவது, அவ்வார்த்தைகளின் மூலங்கள், அவை திரிந்த வரலாறு குறித்த கட்டுரைகளைத் தொடர்ந்து எழுய்தி வருகிறார் திரு.பா.மணி.

இம்மாத இதழில் மறைக்கப்படும் பழந்தமிழ்ப் பாடல்களைப் பற்றிய தன் கருத்துகளைச் சான்றுகளுடன் பதிந்திருக்கிறார். இருபதாம் நூற்றாண்டின் முதல் பாதியில் வெளிவந்த செய்யுள் தொகுப்பு நூலின் தற்போதைய மறுபதிப்பில் பல பாடல்கள் விடுபட்டிருப்பதாகத் தெரிவிக்கிறார். இவை பெரும்பாலும் பயின்று வரும் வார்த்தைகளின் பயனாகவே நீக்கப்பட்டிருக்கின்றன. செய்யுளில் இடம்பெறக்கூடிய அளவுக்கு தகுதியான ஒரு சொல் அடுத்தத் தலைமுறைக்குப் போகக்கூடாது என்கிற பண்பாட்டு அக்கறை பதிப்பகங்களை ஆட்கொண்டுள்ளதை வியக்காமல் இருக்க முடியவில்லை.

தமிழ்ச் சமுதாயம் பழமையானது என்பதற்கு நம் இலக்கியங்களையும் ஒரு சான்றாகவே சொல்லி வருகிறோம். ஆனால், இப்படியாக இலக்கியங்கள் மறைக்கப்பட்டு வருமானால் எதிர்காலத்தில் நம் தொன்மைக்குச் சான்றாக எது மீதமிருக்கும் எனத் தெரியவில்லை என்ற கட்டுரையாசிரியரின் கவலை நம்முடையதும் கூட.

அவர் குறிப்பிட்டுள்ள நூலின் தற்போதைய பதிப்பில் நீக்கப்பட்ட காளமேகப்புலவரின் ஒரு பாடல் இது

மாடுதின்பான் பார்ப்பான் மறையோது வான்குயவன்
கூடிமிக மண்பிசைவான் கொல்லனே - தேடி
இரும்படிப்பான் செக்கான்எண் ணெய்விற்பான் வண்ணான்
பரும்புடவை தப்பும் பறை


ஒரு பார்வையில் யாரையும் ஒரு கணம் திகைக்க வைக்கும் இச்செய்யுள். சமுதாய அடுக்குகளில் பல்வேறாகப் பிரித்து வைக்கப்பட்ட மனிதர்களின் குலத்தொழில்கள் இன்னின்ன என்று வரையறுக்கப்பட்டிருந்தன. அக்கோடுகளைத் தம் பாடல் வரிகளால் சூசகமாக அழிக்கும் துணிவு காளமேகப்புலவருக்கு இருந்திருக்கிறது; எதிர்த்து எழும் குரல்களுக்குப் 'பூட்டுவிற் பொருள்கோள் அணியைப்' பதிலாகச் சொல்லும் தெளிவும் கூடவே இருந்திருக்கிறது. வில்லின் இரு முனைகளைப் பூட்டும் நாணைப் போல செய்யுளின் இறுதிப் பதத்தை முதல் பதத்துடன் இணைத்துப் பொருள் கொள்ளச் சொல்கிறது இவ்வணி. எந்த அணியுமில்லாமலும் அழகுடன் இருப்பதாகவே படுகிறது இச்செய்யுள்.

Monday, October 04, 2010

வார்ப்பு கவிதைகள்

வார்ப்பு கவிதை மின்னிதழின் அக்டோபர் 2ஆம் தேதி பதிப்பில் என் கவிதைகள் வெளியாகியிருக்கின்றன. வார்ப்பு ஆசிரியருக்கு நன்றி!

-ப்ரியமுடன்
சேரல்


01 தீரா


இரை தேடவும்
இரை தின்பதற்கென்றுமே
விடிந்து தொலைக்கிறது
ஒவ்வொரு நாளும்

முடிந்தும் போகிறது
தின்று தீர்த்ததும்

உச்சி வெயில் பார்த்து
மல்லாந்து கிடந்து
மரித்துப்போன எலியின்
வளையிலும்,
கொத்திக்கொத்தி
இறைச்சி சேகரித்த காக்கையின்
கூட்டிலும்,
காத்திருக்கும்
சில பசித்த குஞ்சுகள்



02 ஆவது

எப்படியெல்லாமோ
ஆக வேண்டுமென்று
ஆசையிருந்து
எப்படியெல்லாமோ ஆகியும்
விட்டாச்சு

இப்போது யாருமே கேட்பதில்லை
என்னவாகப்போகிறாய்?

என்னுள் ரகசியமாய்
முளைவிடத் தொடங்கியிருக்கிறது ஆசை
ஒரு பெரிய்ய்ய்ய்ய்ய்ய்ய மலையோ,
ஒரு பெரிய்ய்ய்ய்ய்ய்ய்ய கடலோ,
ஒரு பெரிய்ய்ய்ய்ய்ய்ய்ய வானமோ,
ஒரு பெரிய்ய்ய்ய்ய்ய்ய்ய பூதமாகவேனும்
ஆகிவிடுவதென்று

ஆனபின் ஏதுவாயிருக்கும்!

எப்போதும் விரிந்தேயிருக்கும்
கதைசொல்லும் குழந்தைகளின் கைகளுக்குள்
என்னைச் சரியாகப் பொருத்திக்கொள்ளலாம்


வார்ப்பு மின்னிதழுக்கான சுட்டி

Thursday, September 30, 2010

நாட்குறிப்பு

அதிகாலையிலேயே விழித்துவிட்டேன்

சாளரத்தில் படர்ந்து கிடந்த வானத்தில்
பறவைகளெதுவும் இல்லாதிருப்பதைச்
சும்மா வெறித்திருந்தேன்

கொஞ்சம் கொஞ்சமாக நிறம் மாறிக்கொண்டிருந்த
வானத்தோடு நிறம் மாறிக்கொண்டிருந்தோம்
என் வீடும், நானும்

அலுவலக நேரத்தைப் பொறுத்தமைந்த குளியல்
உடலை நனைப்பதைத் தவிர வேறெதையும்
செய்ததில்லை

இட்டிலிக்குத் தேங்காய்ச் சட்டினி
சுவையாகவே இருந்திருக்கும்

அலுவலகம் செல்லும் பயணம்
அனிச்சையாகவே நிகழ்ந்தது
என்றும் போல

வேலையும் வேலை நிமித்தமும்
பாலைத்திணை

சாயங்காலம் என்றொரு பொழுதிருப்பதை
மறந்தான பிறகு வீடு திரும்பும் உற்சவம்

களைத்து, வீடடைந்து, உண்டுறங்க,
நிறைந்த ஒரு நாளின் குறிப்பாக எழுதுகிறேன்

கவிதைக்கான எந்த முகாந்திரமும்
வாய்க்காத வாழ்வின் இந்நாள்
நாசமாய்ப் போகட்டும்

Thursday, September 23, 2010

ஐக்கியமானவன்

சுதந்திர தேவி சிலையின்
உயரம் மீண்டுமொருமுறை அளந்தான்

நயாகராவின் துளிகளில் ஒன்றை
கையில் வைத்தலைந்த கதை சொன்னான்

இரவு நடன விடுதியில்
உடன் மதுவருந்தி
முயங்கிக் கிடந்து சென்ற
வெள்ளைக்காரப் பெண்ணின்
உடல் வாசம் சொன்னான்

டிஸ்னி உலகின்
பொம்மை மனிதர்களுடன்
பிடித்துக்கொண்ட
புகைப்படம் கொடுத்தான்

உயிர்த்தளம் குளிரும்
மைனஸ் டிகிரியின்
நீளம் தெரிவித்தான்

சொர்க்கவாசல் எப்போதும்
திறந்தேயிருக்கிறது உனக்கும்
என்றான் நண்பன்
மீண்டும் நுழையுமுன்

எனக்கென்னவோ
அவன் பத்தாம் வகுப்பில்
என்னைவிடக் குறைவாய்
மதிப்பெண் எடுத்ததே
அடிக்கடி நினைவில் வந்துபோனது

Tuesday, September 21, 2010

வெறும் காற்று

எங்கிருந்து கொண்டுவந்து தள்ளுகிறது
இவ்வளவு காற்றை
இந்த மின்விசிறி?

காற்று வெறும் காற்றாக மட்டுமே
இல்லாதிருப்பதுதான் ஆச்சரியம்

மௌனம் முற்றிலும்
சபிக்கப்பட்ட நாட்களில்
பேசிக்கொண்டேயிருக்கிறது மின்விசிறி
ஓயாமல்

நெருப்பிலான பெரும்போர்வையொன்றை
விரித்துப்போர்த்தியது போலும்
வெய்யில் நிறைந்த இந்நகரின்
புழுக்கமடர்ந்த மதியப்பொழுதுகளில்
சுற்றிச் சுற்றிச் சலித்துப்
பெருமூச்சில் அயர்கிறது

மின்சாரமறுந்த வேறொரு நாளில்
சவமெனச் சமைகிறது
பேச்சும் மூச்சுமற்று

Monday, August 02, 2010

கவிதையோடு வாழ்தல்

பேனா எடுத்து வா
என்றவனிடம்
தேடிக்கொண்டிருப்பதாய்ச் சொல்கிறாள்

காத்துக் கொண்டிருக்கிறது
என்னைப் போலவே
கவிதையும்

எழுதி வைக்கும் வரை
மறந்துபோகாமலிருக்கும்
கவிதையைப் படைப்பது பாக்கியம்

இன்னொரு சிந்தனை
இடையூறாமலிருப்பதும் உத்தமம்

என்ன செய்தும்,
இன்னும் வாய்க்கவில்லை
இடைப்பட்ட நொடிகளில்
கவிதையோடு வாழ்தல்

Friday, July 30, 2010

கதைகள் கனவுகளை உமிழும்

மிகையதார்த்தம் பேசும்
கதைசொல்லியொருவனின் பிணம் மிதந்து வரும்
புராண நதிக்கரையில் காத்திருக்கிறேன்

வந்துசேரும் பிணத்தில் ஒளிந்திருக்கின்றன
வெகுகாலமாய் நான் தேடிச் சோர்ந்திருந்த
மிகையதார்த்தக் கதைகள்

கதைகளின் அரையுறக்கம் சேர்ந்த
தலைகளைத் தூக்கிப்பிடித்து
தோளில் இருத்தி நடக்கத் தொடங்குகிறேன்

கதைகள் உமிழ்ந்தபடி
வருகின்றன
வழியெங்கும் என் கனவுகளை

Thursday, July 08, 2010

நிலாச்சோறு

எல்லாத் தாய்களுக்கும்
கிடைத்துவிடுகிறதொரு நிலவு
தம்பிள்ளைக்குப் பறித்துக் கொடுத்து
உணவூட்ட

எல்லாக் குழந்தைகளும்
பத்திரப்படுத்துகிறார்கள்
தங்களுக்கென
தனியொரு நிலவை

எல்லா நிலவுகளும்
ஒன்றாகும் பொழுதில்
தொலைந்தே போகின்றன
எல்லா நிலவுகளும்,
எல்லாக் குழந்தைகளும்

Monday, June 28, 2010

பேர் சொல்லும் பலகை

சென்னையில் கடந்த ஒரு வார காலமாகவே இவை கண்ணில் பட்டவண்ணமிருக்கின்றன. எல்லாவற்றையும் ஆச்சரியப்படுவதற்கில்லை; சில அழகானவையாக, சில அபத்தமாக, சில வெறும் பேருக்காக, என்று பெயர்ப்பலகைகளைத் தமிழில் மாற்றி இருக்கிறார்கள். மாநகராட்சியின் வற்புறுத்தலுக்குப் பிறகுதான் இந்த மாற்றம் என்பது குறிப்பிடத்தக்கது. இதனால் தமிழை வளர்த்து விட முடியுமா? இத்தனை நாள் எங்கே போயிருந்தது இந்த அக்கறை? இவர்கள் இடும் பல பெயர்களைப் பல பேர்களால் புரிந்து கொள்ள முடியாதே? இந்தப் பெயர்களை விட ஆங்கிலப்பெயர்கள் புரிகிற மாதிரி இருக்கின்றனவே? என்ற விவாதங்களை எல்லாம் கொஞ்சம் ஒத்தி வைத்து விட்டு இந்த முயற்சியை ஆதரிக்க வேண்டிய சூழலில்தான் நாம் இருக்கிறோம். அந்த அளவுக்கு ஆங்கிலப் பெயர்கள் அங்கிங்கெனாதபடி எங்கும் ஆக்கிரமித்திருந்தன.

குழந்தைகளுக்குக் கூட தாய்மொழியல்லாத மொழியில் பெயரிடுவதைப் பெருமையாகக் கருதும் இனங்களில் நாம் முதன்மையானவர்களாக இருப்போம். அப்படியானவர்கள் கடைகளுக்கும் நிறுவனங்களுக்கும் ஆங்கிலத்தில் பெயரிடுவதொன்றும் வியப்பான செய்தியில்லை. ஆங்கிலேயர்கள் ஆட்சியின் கீழ் பெருமைக்குரிய செயலாகத் தொடங்கிய வழக்கம், பின் பழக்கமாக மாறிவிட்டிருக்கிறது.

சீமலத்திப்பழம், குளம்பி என்று பார்க்கும் பொருட்களையெல்லாம் தமிழ்ப்படுத்திக் கொண்டிராமல், தேவையான அளவுக்கு, தேவையானவற்றை மட்டும் தமிழ்ப்படுத்தும் செயல் மிகவும் ஆரோக்கியமானதே! அந்தவகையில் பெயர்ப்பலகைகளைத் தமிழ்ப்படுத்தும் முயற்சி வெற்றியடைந்திருக்கிறது என்றே படுகிறது.

நான் பார்த்த சில பெயர்ப்பலகைகள் ரசிக்கவைத்தன.

Bakery - அடுமனை
Bakers - அடுமனைஞர்
Fancy store - வளையலகம்
Hardwares - வன்பொருளகம்
Plaza - அங்காடி
Super market - பேரங்காடி

சில அபத்தமாகப்பட்டன.

Plastics - நெஹிலியகம்
Coffee shop - குளம்பியகம்

நெகிழி என்பது பிளாஸ்டிக்குக்கான தமிழ்ப்பதம் என்று நினைக்கிறேன். இதைத் தமிழ்ப்படுத்தப்போய்த்தான் நெஹிலியகம் ஆகியிருக்கிறது போலும்.

உணவு வழங்கும் இடங்கள் உணவகங்களாகியிருக்கின்றன. தங்கும் வசதி உள்ள ஓட்டல்கள் எதுவும் பெயரை மாற்றியதாக என் கண்ணில் படவில்லை. தமிழில் பெயர்ப்பலகை வைக்காதவர்களை மாநகராட்சி என்ன செய்யும் என்பதைப் பொறுத்திருந்து பார்ப்போம்.

தமிழ்ப்படுத்தப்பட்ட பலவகை விற்பனை நிலையங்களில் பொதுவான அம்சமாகப்படுவது 'அகம்' விகுதி. இதன் பொருள் அறிந்தோ அறியாமலோ எல்லோரும் சரியாகவே பயன்படுத்தி வருகிறார்கள். அதுவரை மகிழ்ச்சியே! இனிப்பு விற்பனை நிலையம், அல்லது இனிப்புக் கடை, என்பதைவிட இனிப்பகம் என்பது அழகாகத் தோன்றுகிறது.

அங்காடி என்ற சொல்லே விற்பனை நிலையத்துக்கான மிகச் சரியான, மிகப் பொருத்தமான தமிழ்ச் சொல் என்றாலும் அதை மிகச் சில இடங்களிலேயே காண முடிகிறது.

பெயர்ப்பலகைகளைத் தமிழிலாக்கும் இந்நற்செயலை, சென்னை என்ற எல்லையோடு நில்லாமல், தமிழகத்தின் பிற பகுதிகளில் உள்ளவர்களும் கூட பின்பற்றலாமே! அரசாணை வரட்டுமென்று ஏன் காத்திருக்க வேண்டும்?

Friday, June 11, 2010

என்றாலும்

அதை அறிந்து கொண்டதில்
உனக்குண்டான மகிழ்ச்சி
அலாதியானது

அதைப் பற்றி என்னிடம்
சொல்லத் தொடங்குகிறாய்
ஒரு சிட்டுக்குருவியின்
காலைநேரப் பரபரப்புடன்

அதல்லதென்று நிரூபிப்பதில்
எனக்கொன்றும் ஆவதில்லை

அது
இன்னதென்று நானும்
தீர்மானமாய் அறியவில்லை

என்றாலும் நிறுவுகிறேன்
அதுவும், நீயும் தவறென்பதை

இது எப்போதும் நடக்கிறது
இயல்பாக...
மிக இயல்பாக....

பின் நீ
சிறகுகள் பிய்ந்து
மரித்துப்போன
சிட்டுக்குருவியொன்றின் சடலத்தை
நானறியாமல் புதைக்கும்
முனைப்பிலிருக்கிறாய்,
வெகு சிரத்தையுடன்

Monday, June 07, 2010

ஆடி முடித்தவனின் பகல்

எப்போதோ படித்த ஏதோ ஒரு சிறுகதையில் வரும் ஒரு வயோதிகப் பாத்திரத்தை என்மேல் வாங்கிக் கொள்ளும் உந்துதலினால் எழுதிய கவிதை இது. முதுமையின் வாசம் இப்படித்தான் இருக்குமென்று தெரியவில்லை. இப்படியும் இருக்கக்கூடும்.

இப்போதெல்லாம்
யாரும் வருவதேயில்லை

காற்று மட்டும் அவ்வப்போது வந்து
கதவு தட்டிப் பார்த்துப் போகிறது

ஆடி முடித்த விளையாட்டுகளின்
பழைய நினைவிலேயே
ஊர்கின்றன
வெக்கை படிந்த
பகல் பொழுதுகள்

சுகவீனமுற்ற பாதங்கள்
சுமக்க முடியாமல் தள்ளாடுகின்றன
மனத்தின் சுமையை

பிடிமானமற்ற கழிவறையில்
கிழிந்துபோன மூட்டுச்சவ்வுகளை
மடித்து உட்கார்ந்து
சிறுநீர் கழிக்கையில்
ஏனோ வந்துபோகிறது
இறந்து போன மனைவியின் நினைவு

பழைய எதிரிகளோடு மீண்டுமொருமுறை
விட்டுக்கொடுத்து விளையாட
எத்தனிக்கிறது மனது

முதன்முதலாய்ப்
புணர்ந்தவளின் கதகதப்பு,
சுரப்பிகள் வற்றிப்போன
வாழ்வின் ஒரு நாளில்
பரவுகிறது தேகமெங்கும்

விருப்பமென்று பெரிதாய்
எதுவும் இல்லை

விட்டோடிவந்த முதல் காதலியிடம்
கதறியழுது கேட்க மன்னிப்பு

உள்ளங்கையை
உள்ளங்கைக்குள் வைத்தழுத்தி
கதை சொல்ல அல்லது
கதை கேட்க
ஒரு துணை

எனக்கே எனக்கான
சிநேகிதர்கள் எவரோடேனும்
தினமொருமுறை சந்திப்பு

இப்போதைக்கு....
யாரேனும் புகட்டுவதாயின்
கொஞ்சம் இருமல் மருந்து

அப்படியே
கொஞ்சம் தூக்கம்

முடிந்தால்
அப்படியே
மரணமும்

Friday, June 04, 2010

திண்ணை மின்னிதழ்

அன்பிற்கினிய நட்புக்கு,

'திண்ணை' மின்னிதழின் இவ்வார வெளியீட்டில் என் கவிதைகள் வெளியாகியிருக்கின்றன. திண்ணைக்கு நன்றி! இவற்றுள் இரண்டு கவிதைகள் மழையைப் பற்றியனவாகவும், ஒன்று பனிக்கால இரவைப் பற்றியதாகவும் நானறியாமல் அமைந்துவிட்டது மிகவும் இயல்பானதே! கூடவே அழகானதும்.


வெளியான கவிதைகள் :

வெளியில் நனையும் மழை
ஞானம்
இன்னொரு மழை



-ப்ரியமுடன்
சேரல்

Friday, May 28, 2010

பேய்க்கதைகள்

சிறுகதையின் இலக்கணம் என்று எதையும் அறிந்து கொள்ளாமல், ஏதோ ஓர் ஆர்வக்கோளாறில் ஒரு வருடத்துக்கு முன்பு எழுதியது இது. பின் இலக்கணம் அறியத் தொடங்கிய பிறகு மாற்றம் செய்ய வேண்டும் என்ற எண்ணமிருந்தாலும், அலுப்பு காரணமாகவோ, போதிய அனுபவமின்மை காரணமாகவோ அதைச் செய்யவேயில்லை. அரைவேக்காடாக கூகிள் டாக்ஸில் கிடந்த கதையைப் படிக்க நேர்ந்த போதுதான் இதை இங்கே பதிவிட வேண்டுமென்ற கொடூரமான எண்ணம் உதித்தது. இட்டும் விட்டேன். இனி உங்கள் பாடு...

மே மாத இரவு ஒன்று. கோடைக்காலம் என்றாலே மின்வெட்டு அடிக்கடி நிகழ்கிற விஷயமாகிவிடுகிறது. இன்றைக்கும் அறையில் மின்சாரம் இல்லை. இரவு சாப்பாட்டை முடித்து வந்திருந்தோம், நானும், இன்னும் திவா மற்றும் சேகர். வசந்த் இன்னும் வரவில்லை. ஜன்னல் கதவுகளைத் திறந்துவிட்டுக்கொண்டு படுத்திருந்தோம். யாருக்கும் தூக்கம் வரவில்லை. மெல்லிய புழுக்கத்தோடு கொஞ்சம் காற்றும் வீசிக்கொண்டிருந்தது. தூக்கம் வரும் வரைப் பேசலாம் என்று முடிவு செய்து, என்ன பேசலாம் என்பதைப் பற்றி விவாதிக்கத் தொடங்கினோம்.

'நாம என்னைக்குடா உருப்படியா பேசியிருக்கோம்? வழக்கம் போல மொக்கை தான்' இது திவா.

'இன்னைக்காவது ட்ரை பன்னுவோண்டா...' இது நான்.

'சரி சரி என்ன பேசுறதுன்ற டாபிக்ல மொக்கை போட ஆரம்பிச்சிடாதீங்க...'இது சேகர்.

'ஒ.கே.டா அப்போ நீயே ஆரம்பி. ஒரு கதை சொல்லு'

'என்ன கதை? ஆஃபீஸ் ல நடக்குற கதை சொல்லட்டுமா?' சேகர்.

'ஏ... வேணாம் வேணாம். எல்லா ஆஃபீஸ்லயும், நம்ம ஊரு மெகா சீரியல் மாதிரி ஒரே கதைதான் வேற வேற கேரக்டர்ஸ் பேர்ல ஓடிட்டிருக்கு. இன்டெர்னல் பாலிடிக்ஸ், உழைப்புக்கு மரியாதை இல்ல, சோப்பு போடுறவனுக்கு ப்ரோமோஷன், ரெண்டு பேருக்கு காதல், ஃபீல் பண்ற மூணாவது ஆள், மாடு மாதிரி வேல வாங்குறாங்க... எட்செட்ரா எட்செட்ரா... இதைத் தவிர ஆஃபீஸ் கதைகள்ல என்ன இருக்கு?' பொரிந்து தள்ளினான் திவா.

'பாருங்க சார், இந்தப் பையனுக்குள்ளையும் ஏதோ இருந்திருக்கு. பாதிக்கப்பட்டவரின் கோரிக்கைக்கிணங்க அலுவலகக் கதைகள் விலக்கப்படுகின்றன. வேற என்னடா பேசலாம்?'

இப்படியே நாங்கள் பேசிக்கொண்டிருந்ததைச் சொன்னால், என்னை மாதிரியே நீங்களும் தூங்கி வழிய ஆரம்பித்துவிடுவீர்கள். முக்கியமான பகுதிக்கு வருவோம்.

'டேய், பேய்க்கதை ஒன்னு சொல்லுங்கடா.' என்று அடி போட்டான் சேகர். அதிலும் யார் சொல்வதென்று குழப்பம். கதை கேட்டவனே சொல்ல வேண்டும் என்று பெரும்பாலானோர், என்ன பெரும்பாலானோர்? இருப்பது மூன்று பேர், நானும் திவாவும் முடிவு செய்தோம்.

'ஐடியா கொடுத்தது நான். நான் ஆரம்பிக்க மாட்டேன். நீங்க யாராவது சொல்லுங்க. அப்புறம் நான் சொல்றேன்'

சரி என்று நானே சொல்ல ஆரம்பித்தேன். அது பேய்க்கதை என்று சொல்ல முடியாது. பேய் பற்றிய என் அனுபவம் என்று வேண்டுமானால் சொல்லலாம். அப்போது நான் கல்லூரியில் முதலாம் ஆண்டு படித்துக் கொண்டிருந்தேன். மாதம் ஒரு முறை ஊருக்குப் போய் வருவது வழக்கம்.

அது ஒரு அக்டோபர் மாதம். தமிழ்நாடு முழுக்க மழை நன்றாக வெளுத்து வாங்கிக்கொண்டிருந்த நேரம். ஒரு சனிக்கிழமை சாயங்காலம், ஊருக்குப் புறப்பட்டேன். மழையில் சகதியில் சிக்கி பேருந்து பக்கத்து டவுனை அடைவதற்கும், எங்கள் ஊருக்குப் போகும் கடைசிப் பேருந்து புறப்படுவதற்கும் சரியாக இருந்தது. ஓடிப்போய் ஏறிக்கொண்டேன். எல்லா சீட்டுகளிலும் தண்ணீர் உட்கார்ந்திருந்தது. மக்கள் நின்றுகொண்டிருந்தார்கள்.

அரை மணி நேரப் பயணத்திற்குப் பிறகு எங்கள் ஊருக்கான நிறுத்தத்தில் இறங்கினேன். கூட யாரும் இறங்கியதாய்த் தெரியவில்லை. இங்கிருந்து இரண்டு கிலோமீட்டர் தூரம் நடக்க வேண்டும். எப்போதும் மற்ற நாட்களில் லிஃப்ட் கொடுப்பதற்கென்று யாராவது வருவார்கள். இன்று பெய்த மழையில் கடைகள் கூட எதுவும் திறந்திருக்கவில்லை. எல்லாரும் எப்போதோ வீட்டில் போய் அடைந்திருப்பார்கள்.

தெரு விளக்குகளும் இல்லை. பல வருடங்கள் பார்த்துப்பழகிய பாதை தானே என்ற தைரியத்தில் நடக்கத்தொடங்கினேன். வழியில் சாலையோரமாக சுடுகாடு ஒன்று இருக்கிறது. அது பெரிய பயமில்லை. ஆற்றங்கரையோரமாக அமைந்த சாலையாதலால், பாம்புகள் அடிக்கடி பாதையில் குறுக்கிடும். மழைக்காலம் என்றால் சொல்லத்தேவையே இல்லை. சாலையும் இந்த அதிக மழைக்கு எவ்வளவு தாக்குப்பிடித்திருக்கும் என்று தெரியாது.

பேச்சுத்துணைக்கும் ஆளில்லாமல் புறப்பட்டேன். அப்பாவிடம் வருவதாகச் சொல்லியிருக்கலாம். ஆனால் தொலைபேசி இணைப்புகளும் அறுந்து கிடக்கின்றன.

'ஏ...நிறுத்து நிறுத்து. அப்போ உன்கிட்ட செல் ஃபோன் இல்லையா?'

'ஐயோ அறிவுக்கொழுந்தே.... அப்போ எல்லாம் செல் ஃபோனே கெடையாதுடா'

'ரைட்டு விடு. அப்புறம்'

கதவு தட்டப்பட்டது. சேகர் எழுந்து போய் திறந்தான். வசந்த் தான். உள்ளே வந்து ஜோதியில் ஐக்கியமாகிக் கொண்டான் வசந்த். அவன் எப்போதும் அவ்வளவாகப் பேச மாட்டான். எங்கள் கூட்டத்தில் தப்பி வந்து சேர்ந்துவிட்ட ஆள் அவன்தான்.

தார்ச்சாலை பல இடங்களில் இல்லாமல் போக, சேற்றில் இறங்கி ஒரு மார்க்கமாக நடந்து போய்க்கொண்டிருந்தேன். இன்னும் கொஞ்ச தூரத்தில் சுடுகாடு வரப்போகிறது என்னும் அறிவு கிலியைக் கொடுத்தது. சங்கீத மேகத்தை விசிலில் தேன் சிந்த விட்டு விட்டு நடந்து கொண்டிருந்தேன். சுடுகாடு நெருங்க நெருங்க இதயம் எக்குத்தப்பாகத் துடித்தது. கொட்டித்தீர்த்த மழைக்குப் பிறகும் ஒரு பிணம் தனிமையில் எரிந்துகொண்டிருந்தது. அது ஒரு ஆறுதல். பிணம் எரிந்துகொண்டிருந்தால் வெட்டியான் அங்குதான் இருப்பான். ஒரு ஆபத்து என்று குரல் கொடுத்தால் ஓடி வர வாய்ப்பிருக்கிறது.சங்கீத மேகத்தின் சத்தத்தைக் கூட்டி, நடையிலும் வேகத்தைக் கூட்டிச் சுடுகாட்டைக் கடந்திருந்தேன்.

மனம் கொஞ்சம் சகஜ நிலை அடைந்திருந்தது. இருந்தாலும் தைரியம் கொஞ்சம் அதிகம்தான். திடீரென்று பின்னாலிருந்து ஒரு குரல், 'தம்பி மணி என்னாச்சு?' என்று ஒரு பெண்குரல். சின்ன வயசில் பக்கத்து வீட்டில் இருந்த முறுக்காத்தாவின் குரல் மாதிரியே கேட்டது. அசட்டு தைரியத்தில் திரும்பிப் பார்த்துவிட்டேன். என் கழுத்து உயரத்தில் ஒரு வயதான் பெண் நின்றுகொண்டிருந்தாள். சேலை தொப்பலாக நனைந்திருந்தது. அப்பியிருந்த இருட்டில் அவள் முகம் எனக்கு எப்படித்தெரிந்தது என்று புரியவில்லை. முகம் வெளிறிப்போவதென்று கேள்விப்பட்டிருக்கிறேன். அதை அன்று தான் உணர்ந்தேன். அவள் முகம் இல்லை. என் முகம் அப்படி ஆனதாக ஒரு பிரம்மை.

'பதினொன்னே முக்கால்' என்று சொல்லி விட்டு விடு விடுவென்று நடக்கத்தொடங்கினேன். சில அடிகள் நடந்த பிறகுதான் தோன்றியது. அந்தப் பெண்மணிக்குக் கால்கள் இருந்ததா? நான் பார்த்தேனா? நினைவில்லை. திரும்பிப் பார்க்கலாமா என்றொரு சபலம். அடி வயிற்றில் சங்கடமாக இருந்தது. மெல்லத் திரும்பி எனக்குக் காத்திருந்த அதிர்ச்சியை மென்று விழுங்கினேன். ஒரு நிமிடத்துக்கும் குறைவான காலத்துக்கு முன்பு அவள் நின்றிருந்த இடத்தில் வெற்றிடம் ஒன்று உருவாகி இருந்தது. கணகளை அலையவிட்டேன். சுற்றியிருக்கும் வெளியெங்கும் இருள் கருப்பு வண்ணமடித்தது போல் கிடந்தது. அவள் எங்கும் இல்லை. அவள் வயதுக்கு இத்தனை நேரத்தில் அதிகபட்சம் ஐந்து அடிகள் எடுத்து வைத்திருக்க முடியும்.

மீண்டும் இதயம் ஓடி முடித்த ஓட்டப்பந்தய வீரன் போல அடித்துக்கொள்ள, அதன் பிறகு ஓடத் தொடங்கினேன். ஓட்டம் வீட்டில் வந்து தான் நின்றது. வழியில் எப்போதும் நாய்கள் இருக்கும். இதே வேறு ஒரு நாள் என்றால் என் உடலில் ஒரு அரை கிலோவாவது குரைந்திருக்கும், சாரி குறைந்திருக்கும். பதட்டத்தை வெளிக்காட்டிக் கொள்ளாமல், குளிரில் நடுங்குவதாகப் பொய் சொல்லி அன்றிரவு சமாளித்துவிட்டேன். மறுநாள் மழை ஓய்ந்து போயிருந்தது. அந்த வழியாகப் போகும்போது கண்ணுக்கு எட்டிய தூரம் வரை இருபது பேருக்கு மேல் இருந்தார்கள். நான் முதல் நாளிரவு நடந்ததை நினைத்துக் கொண்டேன். அதன் பிறகு இரவில் தனியாக நான் அங்கே போனதே இல்லை. சொல்லி முடித்து விட்டேன். எல்லோரும் நான் ஏதோ பெரிதாகச் சொல்லப் போகிறேன் என்று நினைத்திருப்பார்கள். நீங்களும்தானே. சரி விடுங்கள் நான் பார்த்த பேய் அவ்வளவுதான்.

திவா கேட்டான் 'என்னடா...?அது பேய் தாங்கிறியா?'

'தெரியல. ஆனா அப்படித்தான் தோணுது'

எல்லோரும் ஆச்சரியப்படும் விதமாக அப்போது வசந்த் பேசினான்.

'இல்ல. அது பேயா இருக்கணும்னு அவசியம் இல்ல. ஒரு சாதாரண பொம்பளையா கூட இருக்கலாம். அப்போ ரொம்ப இருட்டுன்னு சொல்ற. ஸோ அவ உன் கண்ணுக்குத் தெரியாம பக்கத்துல எங்கயோ கூட இருந்துருக்கலாம். வேற திசையில நடந்து போயிருக்கலாம். நீ ஒரு குரல் குடுத்துருந்தா பதில் சொல்லி இருக்கலாம். நீதான் பயந்து ஓடி வந்துட்டியே.'

அவன் சொல்வதும் சரி போலத்தான் தோன்றியது.

'அப்புறம். இப்படி ஒரு விஷயம் நடக்காமலேயே கூட இருக்கலாம். இது உன் மனப் பிரம்மையா கூட இருக்கலாம். மனித மனம் வந்து எப்போதுமே ஏதாவது ஒரு விஷயத்தை எதிர்பாத்துட்டே இருக்கும். அது நடக்கிற மாதிரி, நடந்துட்ட மாதிரி கூட கற்பனை பண்ணிக்கும். இதுவும் கூட அப்படி இருக்கலாம். இருக்குன்னு சொல்லல. இருக்கலாம்னு சொல்றேன்.'

எனக்கு என்னவோ போலிருந்தது. இவன் என்னை மனப்பிளவு கொண்டவன் என்கிறானா? எப்போதும் பேசாதவன், இன்றைக்கு இவ்வளவு பேசுகிறான்.

'ஒரு விஷயம் சொல்லுங்க. ஹை வேஸ்ல ட்ராவல் பண்ணும்போது ரோட் நேரா போயிக்கிட்டே இருக்கிறதை பாத்திருக்கீங்களா?'

ஆம் என்பது போல தலையசைத்தோம்.

'அது எவ்வளவு தூரம் போகுதுன்னு பாத்திருக்கீங்களா?'

இல்லை என்று ஒருவரை ஒருவர் பார்த்துக்கொண்டோம்.

'நானே சொல்றேன். எந்த ரோடும் அதிக தூரத்துக்கு ஒரே நேர்க்கோட்டுல இருக்காது. குறிப்பா ஹை வேஸ். ஏன்னா ராத்திரில ட்ரைவ் பண்ணுறவங்களுக்கு ரோட் நேரா இருந்தா ரொம்ப குஷியாயிடும். வேகமா போய்கிட்டே இருப்பான். ஆனா திடீர்னு எதிர்பாக்காம ஒரு திருப்பம் வந்தா எல்லாமே காலி. அதுக்குத்தான் இடம் இருந்தா கூட ரோடை தொடர்ந்து நேரா போடாம கொஞ்ச தூரத்துக்கு ஒரு திருப்பம் வளைவுன்னு போட்டிருப்பாங்க. ஸோ நம்ம மனசு அலர்ட்டா எப்போதுமே இருந்துகிட்டே இருக்கும். இப்படி இல்லன்னா நம்ம மனசு எப்போதுமே நேரான பாதையையே எதிர்பார்க்கும் வளைவிலும் கூட நேரா இருக்கிற மாதிரியே நெனச்சுக்கும்.'

எங்களுக்குப் புரிந்த மாதிரியும் இருந்தது. புரியாத மாதிரியும் இருந்தது. வசந்த் தொடர்ந்தான்.

'அதுக்காக நான் பேய் இல்லன்னு சொல்ல வரல. எனக்குப் பேய்கள் மேல ரொம்ப நம்பிக்கை உண்டு. சரி. அடுத்தது யார் கதை சொல்லப் போறா?'

எல்லாரும் திவாவைப் பார்த்தோம். அவன் கொஞ்சம் குழம்பி இருந்தான் என்பது குரலில் தெரிந்தது.

'இதுவும் ஒரு எக்ஸ்பீரியென்ஸ் தான். பெசண்ட் நகர் வீட்ல இருந்தோம்ல. வசந்தும் தியாகுவும் அப்போ எங்கூட இல்ல. சேகர் இருந்தான். இன்னும் ரெண்டு ஃப்ரெண்ட்ஸ் இருந்தாங்க. ஒரு சனிக்கிழமையோ ஞாயித்துக்கிழமையோ. வீட்டுல யாரும் இல்ல. நான் மட்டும் இருந்தேன். மத்தியானம் நல்லா தூங்கிட்டேன். சாயந்திரம் ரொம்ப நேரம் ஆயிடுச்சு போல. திடீர்னு முழிப்பு வந்து எழுந்திருக்கலாம்னு பாக்கறேன். முடியல. கண்ணைக் கஷ்டப்பட்டு தெறக்கறேன். எதுவோ எம்மேல உட்காந்துருக்கு. புகையை ஒரு மனுஷன் மாதிரி செஞ்சா எப்படி இருக்கும்? அப்படி ஒரு உருவம். கை ரெண்டும் என் தோளை அழுத்திப் புடிச்சிருக்கு. திமிறிக்கிட்டு எழுந்திருக்கிறேன். லட்சம் காக்காய்ங்க ஒன்னா கத்துனா எப்படி இருக்கும்? அப்படி ஒரு சத்தம் காதுக்குள்ள கேக்குது. அப்புறம் கிறீறீறீறீச்ச்ச்ச்ச்ச் னு ஒரு சத்தம். எல்லாம் ஒரு அரை நிமிஷம் தான். ஒரு மணி நேரமா கூட இருக்கலாம். எனக்குத் தெரியல. பதறியடிச்சு எழுந்திருக்கிறேன். எதுவுமே இல்ல. நிசப்தமா இருக்கு. உடம்பு முழுக்க வியர்த்திருக்கு. கொஞ்சம் கொஞ்சமா எல்லாம் ஞாபகத்துக்கு வருது. நான் வீட்டுல உள் ரூம்ல தூங்கிட்டு இருக்கேன். சாயங்காலம் ஆகிடுச்சு. வீட்ல யாரும் இல்ல. இன்னும் லைட் போடல. இருட்டா இருக்கு. கதவு சாத்தியிருக்கு. ராத்திரி எக்மோர் வரைக்கும் போகணும். துணி ஊற வச்சிருக்கேன். துவைக்கணும். எல்லாம் புரிஞ்சிடுச்சி. ஆனா அந்த நிமிஷம் நடந்தது என்னன்னு மட்டும் புரியல. இப்போ வரைக்கும். அது பேயா? வேற எதுமா? நான் இன்னும் கொஞ்சம் நேரம் தூங்கி இருந்தா என்ன ஆயிருக்கும்? ஒன்னுமே புரியல' சொல்லி முடித்தான்.

கொஞ்சம் பீதி என்னைப் பிடித்திருந்தது. மற்றவர்கள் என்ன எண்ணிக்கொண்டிருப்பர்கள் என்று தெரியவில்லை. வசந்தைப் பார்த்தேன். அவன் தெளிவாக இருப்பது போல்தான் இருந்தது. இருட்டில் அவன் முகம் கூடத் தெளிவாகத் தெரிவதாகப் பட்டது.

'இதுல பேய்...பிசாசு எதுவும் இருக்க வாய்ப்பில்லைடா. எல்லாம் ஆழ்மனத்தோட லீலைகள். ஏதோவொரு அழுத்தம் உன் மனசுல இருந்துட்டே இருக்கு. உன் பழைய நினைவுகள், நிறைவேறாத ஆசை, வக்கிர எண்ணங்கள் எதோ ஒன்னு அந்த அழுத்தத்தைக் கொடுத்துட்டே இருக்கு. அந்த அழுத்தம் நீ தூங்குற நேரங்கள்ல உன்னை அறியாம வெளிப்படலாம். ஆழ் மனம் மட்டும் அதை உணர்ந்திருக்கும். ஆழ் மனம் விழிக்கிறதுக்கு முன்னாடி, உடம்பு மட்டும் விழிக்க முயற்சி பண்ணும்போது அந்த பிம்பம் உனக்கு நேர்ல திரியுற மாதிரி இருந்திருக்கு. அவ்வளவுதான். அந்த ஓசைகள் வந்து, உன்னோட எக்ஸ்ட்ரா ஃபிட்டிங்ஸ். இது மாதிரி சத்தம் கேக்குறது சுய நினைவில் இருக்கும்போதே கூட எனக்குக் கேட்டிருக்கு. எல்லாருக்கும் கேட்கும்.'

விளக்கம் கொடுத்து முடித்தான் வசந்த். அறையில் மின்சாரம் வந்தது.

'சரி..... நான் பாத்ரூம் போயிட்டு வந்துர்றேன். சேகர் கதையோட ரெடியா இரு' என்று சொல்லிவிட்டு வசந்த் உள்ளே போனான். நாங்கள் படுத்த வாக்கிலேயே கிடந்தோம். அறையின் கதவு மீண்டும் தட்டப்பட்டது. சேகர் எழுந்துபோய்த் திறந்தான். வெளியே நின்று கொண்டிருந்தது......மீண்டும் வசந்த்.

தூக்கி வாரிப் போட எழுந்தேன்.

'அப்படியே அவன ஒரு அறை அறையலாமான்னு இருந்துச்சு எனக்கு. சரி எல்லாம் நெனக்கிறதோட சரி. நமக்கு எங்க அவ்வளவு தைரியம்?' சேகர் பேசிக்கொண்டிருந்தான்.

எனக்கு எதுவும் புரியவில்லை. தலையும் இல்லாமல் காலும் இல்லாமல் இருந்த வரிகள் என்னைக் குழப்பின.

'சார் எழுந்துட்டாரு. டேய் நீதான் கதை சொல்றவனா? நல்லா இருடா' என்றான் திவா என்னைப் பார்த்து.

நான் யோசித்துப்பார்த்தேன். இந்தக்கதைகளும், விளக்கங்களும் எதுவும் எனக்கு இதற்கு முன் தெரியாது. எனக்கு இந்த மாதிரி அனுபவங்களும் நிகழ்ந்ததே இல்லை. பின், இவை யாருடைய நினைவுகள்?

மீண்டும் அறைக்கதவு தட்டப்பட்டது. சேகர் மூன்றாவது முறையாகப் போய்த்திறந்தான். வசந்தும் மூன்றாவது முறையாக வந்திருந்தான். அறையில் மின்சாரம் வந்தது.

Friday, May 14, 2010

தோழி என்றொரு தேவதை - 2

தோழிகள் கூட
அறிந்திராத
உன் படுக்கையறைக்கு
என்னை
நடத்திச் சென்றாய்

அறையெங்கும்
நீக்கமற
நிறைந்திருந்தது
நம்
நட்பின் வாசம்

--------------------

'என்
நட்பு வட்டத்தில்
வீட்டுக்கு வரும்
முதல் ஆண் நீதான்'
என்ற முன்னுரையோடு
அழைத்துப்போனாய்

'வா தம்பி'
என்றழைத்த
உன் தாயின் குரலில்
ஓங்கியொலித்தது
உன் மீதான
நம்பிக்கை

நட்பின் மீதான
நம் நம்பிக்கைக்குச்
சற்றும் குறைந்ததல்ல
அது

--------------------

ஏழாம் வகுப்பு

அறிவியல் தேர்வு

எல்லாம் சரியாய்
எழுதிவிட்டதை
மீண்டுமொருமுறை
சரி பார்த்த பின்
உன் பெயரை நானும்
என் பெயரை நீயும்
எழுதிக் கொடுத்து வந்த
குறும்பை
இன்னும் சொல்லிச் சிரிக்கின்றன
பள்ளி
மைதானத்து மரங்கள்

--------------------

காதலனும் காதலியும்
நடந்தார்கள்
உலகமே அவர்களை
உற்றுப் பார்த்தது

தோழனும் தோழியும்
நடந்தார்கள்
யாருமே அவர்களைப்
பார்க்கவில்லை

--------------------

மௌனமாகப் போனோம்

மௌனமாகக் கடல் குடித்தோம்

மௌனமாகவே திரும்பினோம்

அலைகள் மட்டும்
பேரிரைச்சலாய் இன்னும்
பேசிக்கொள்கின்றன
அமைதியாய்க் கழிந்து விட்ட
நம் வருகையைப் பற்றி


தோழி என்றொரு தேவதை - 1

Thursday, May 13, 2010

படிந்த வரிகள் - 13

இருந்து என்ன
ஆகப் போகிறது
செத்துத் தொலைக்கலாம்
செத்து என்ன
ஆகப் போகிறது
இருந்து தொலைக்கலாம்

- கல்யாண்ஜி


மிகச் சிக்கலான பல பிரச்சினைகளுக்கு மிக எளிதாகவே தீர்வுகள் அமைந்துவிடுகின்றன. இவ்வுண்மையினை உணர்த்தத்தான் அவ்வப்போது பெரிய பிரச்சினைகள் வந்து போகின்றனவோ என்னவோ? 'செத்துப் போய்விடலாம் போலிருக்கிறது. இதிலிருந்து நான் எப்படி மீண்டு வரப்போகிறேன்' என்று புலம்பித் தவித்த எத்தனையோ பேரை எனக்குத் தெரியும். அவர்களில் யாரும் இதுவரை இறந்ததாய்த் தகவலில்லை.

காலத்தின் காற்றோட்டம் நம்மை எங்கெங்கோ அடித்துச் செல்கிறது; எதெதையோ அடித்துவந்து நம்மிடம் சேர்ப்பிக்கிறது; எதெதையோ பிரித்தும் கொண்டு சென்றுவிடுகிறது. எல்லா நிகழ்விலும் மீதமிருப்பவை நம்மீது அழுந்தப் பதிகிற அனுபவ முத்திரைகள்தான்.

அனுபவங்கள் மனிதனை இழைக்கின்றன; அனுபவங்கள் மனிதனாகின்றன; அனுபவங்களே மனிதனாய் அலைவதாக உணர்வது அலாதியானது.

ஒவ்வொரு மரணத்திலும் எண்ணிக்கை மறந்த அனுபவங்கள் அழிந்து போகின்றன. மரணத்துக்கு முன்னதான அனுபவங்களின் அளவிலேயே மதிப்படைகிறது ஒவ்வொரு மரணமும். மரணம் கூட ஒருவகையில் அனுபவம்தானோ?

Tuesday, May 11, 2010

புணர்ச்சி

வார்த்தைகளை உதிர்த்துவிட்டு
மௌனமாகிக் கொண்டோம்

உதிர்ந்த வார்த்தைகள்
அந்தரத்தில் மோதிக்கொண்டன

சண்டையிட்டன

சமாதானம் கண்டன

கட்டித் தழுவின

புணர்ந்து களைத்தன

யாவும் பார்த்திருந்தபின்
புன்னகைத்துக்கொண்டே
ஆயத்தமானோம்
அந்தரத்தில் உறவுகொள்ளும்
வேறிரு வார்த்தைகளை
உதிர்த்துவிட...

Monday, May 10, 2010

மணல் வீடு சிற்றிதழ்

மணல் வீடு சிற்றிதழின் மே - ஜூன் 2010 இதழில் என் கவிதைகள் இரண்டு பிரசுரமாகியிருக்கின்றன. மணல் வீடு இதழ் மற்றும் களரி தெருக்கூத்துப் பயிற்சிப்பட்டறை இணைந்து நடத்திய கலை இலக்கிய இரவு குறித்த பதிவை எழுத வேண்டுமென்று நினைத்து இன்னும் எழுதாமல் இருக்கிறேன். மணல் வீட்டின் இந்த இதழில் வெளிவந்திருக்கும் விழா குறித்த கட்டுரையும், புகைப்படங்களும் மீண்டும் அந்த ஆவலைத் தூண்டி இருக்கின்றன. கூடிய விரைவில் எழுதுவேன் என்று நம்புகிறேன்.

மணல் வீடு இதழின் வலைப்பூ - http://manalveedu.blogspot.com/


வெளியான என் கவிதைகள்

மாய உலகம்

தவம்


-ப்ரியமுடன்
சேரல்

Wednesday, May 05, 2010

ஒரு திரைப்படமும், சில வரிகளும்

'உரையாடல்' அமைப்பின் மாதாந்திரத் திரையிடல் நிகழ்வின் ஓராண்டு நிறைவு 'அன்னா கரீனினா' திரைப்படத்துடன் , சென்னையில் மழை பெய்து முடித்து வெயிலின் உக்கிரத்தைக் குறைத்திருந்த கடந்த ஞாயிற்றுக்கிழமை மாலையில் நடந்தேறியது.

வாழ்க்கையின் மாற்றங்களைப் பொதுவான பிற நிகழ்வுகளோடு தொடர்புபடுத்திப் பார்க்கும் பழக்கம் பெரும்பாலும் எல்லோருக்கும் இருப்பதுண்டு.

கடந்த ஒரு வருடமாக என்னுடன் ஏற்பட்டிருக்கும் மாற்றங்களை, காலவரிசையில், உரையாடலின் திரையிடல் என்ற பொது நிகழ்வோடு தொடர்புபடுத்திப் பார்க்கிறேன். அசாதாரணமான மாற்றங்களுக்கான களமாக வாழ்வின் அந்த நாட்கள் இருந்திருக்கின்றன என்பதைப் புரிந்து கொள்ள முடிகிறது. கடைசி ஐந்து மாதங்கள் இத்திரையிடலுக்கே போக முடியாத அளவுக்கு வாழ்க்கையின் போக்கு மாறிவிட்டிருக்கிறது.

இந்தத் தொடர்புபடுத்திப் பார்த்தல் என்கிற முறை தெரியாதிருந்தால், நிகழ்வுகளை, செய்திகளை நினைவு கொள்வதில் பெரும் சிக்கல் ஏற்பட்டிருக்கும் (எனக்கு கண்டிப்பாக :) ).

முதல் திரையிடலில் நண்பர்கள் இருவருடன் கலந்துகொண்டேன். பெயரளவிலும், எழுத்தளவிலும் மட்டும் அறிமுகமாகி இருந்த பல நண்பர்களை இங்குதான் நேரில் சந்திக்கும் வாய்ப்பு கிடைத்தது. பல புதிய வலைப்பதிவர்களின் நட்பும் கூட இங்குதான் கிடைத்தது. Spring Summer Fall Winter and Spring என்ற கொரிய திரைப்படத்துடன் தொடங்கியது இந்நிகழ்வு.

இத்திரைப்படத்தைப் பற்றிய என் பார்வையை 'யுகமாயினி' இதழில் எழுதி இருந்தேன். சில பாராட்டுக்களும், சில அறிவுரைகளும் கிடைப்பதற்கான வாய்ப்பை அது ஏற்படுத்திக்கொடுத்தது.

தொடர்ந்து வந்த மாதங்களில் முதல் ஞாயிற்றுக்கிழமையின் மாலையை 'உரையாடலின்' உலகத்திரைப்படத்துக்காக என்றே ஒதுக்கி வைத்திருந்தேன்.

நம்மோடு எவ்வகையிலும் ஒத்திராத பிற மனிதர்களின் வாழ்க்கை பற்றிய பிரக்ஞையைக் கொடுக்கும் ஊடகமாக நான் உலகத் திரைப்படங்களைப் பார்க்கிறேன். அந்த வகையில் நம் மொழித் திரைப்படங்கள் மற்றவர்களுக்கு உலகத்திரைப்படமாகுமா என்பது விவாதத்திற்குரிய கேள்வி.

கலாச்சாரம், வாழ்வு முறை, வாழ்வியல் தரம், சிந்தனை, தனி மனித மற்றும் சமுதாய இலக்கு, உணவு, உடை, என்று பல விதங்களில் வேறுமாதிரியானவர்களாக இருக்கும் மனிதர்களின் உணர்வு ஒன்றையே பேசுகிறது என்பதை உலகத் திரைப்படங்கள் எனக்கு உணர்த்துகின்றன. அன்பும், காதலும், காமமும், கோபமும், மகிழ்வும், வெறுப்பும், வேதனையும், நெகிழ்ச்சியும், நெருடலும், சுதந்திரமும் எல்லோரையும் ஆட்டிப்படைத்தும், ஆட்சி செய்தும், நுகரப்பட்டும், நுகர விரும்பப்பட்டும் வரும் சர்வதேச உணர்வுகள் என்பதைப் புரியச் செய்கின்றன இத்திரைப்படங்கள்.

உலகத்திரைப்படங்களைப் பற்றிய அறிமுகம் இன்று பலவழிகளில் கிடைக்கிறது. இணையமும், தேர்ந்த சில புத்தகங்களும், நமக்கு உலகத் திரைப்படங்கள் குறித்தான அறிவை வழங்கி விடுகின்றன. இப்படங்களைப் பார்ப்பதும் கூட கடினமான காரியமாக இல்லை. உரையாடல் அமைப்பு வலைப் பதிவர்களுக்காக என்று தொடங்கி, இன்று எல்லோருக்காகவும் என நடத்திவரும் இத்திரையிடல், உலகத்திரைப்படங்களைப் பார்ப்பதோடு, அவை குறித்த மற்றவர்களின் நோக்கு மற்றும் கருத்துகளைத் தெரிந்து கொள்ளும் களமாக அமைந்திருக்கிறது.

ஓராண்டு நிறைவில் திரையிடப்பட்ட அன்னா கரீனினா திரைப்படத்துக்குப் போயிருந்தேன். ஒப்புதல் கொடுத்த மனைவிக்கும், தக்க சமயத்தில் புறப்பட்ட விருந்தினர்களுக்கும், மாலைப்பொழுதை சன் குடும்பம் விருதுகள் நிகழ்ச்சி ஒளிபரப்பி நிறைத்த சன் தொலைக்காட்சிக்கும் நன்றிகள்.

லியோ டால்ஸ்டாயின் அன்னா கரீனினா புதினத்தை அடிப்படையாகக் கொண்டு எடுக்கப்பட்ட திரைப்படம் இது. இப்புதினத்தின் அடிப்படையில் வெளிவந்த திரைப்படங்களின் வரிசையில் இது முதலாவது. 1930 களில் வெளிவந்திருக்கிறது இத்திரைப்படம். ரஷ்ய மூலக்கதையை ஆங்கிலத்தில் படமாக்கி இருக்கிறார்கள்.

மிக நுண்மையான, அற்புதமான வசனங்கள் நிறைந்திருக்கின்றன. ஒளிப்பதிவிலும், படமாக்கப்பட்ட விதத்திலும் நிறைய 'அட' போட வைத்திருக்கிறார்கள்.

திரைப்படத்துக்குப் பிறகான உரையாடலில் திரைப்படம் மற்றும் அன்னா கரீனினா புதினம் பற்றிய பல செய்திகளை அறிந்துகொள்ள முடிந்தது. மூலக்கதையின் சாராம்சம் கூடுமான அளவுக்குச் சிதையாமல் எடுத்திருக்கிறார்கள் என்பது புரிந்தது. புதினத்தை வாசித்தால் இன்னும் கூடப் புரியக்கூடும்.

எப்போதும் போலில்லாமல் இம்முறை பார்வையாளர்கள் எண்ணிக்கை குறைவு என்றே தோன்றியது. இது போன்ற அமைப்புகள் வெற்றி பெறுவது பங்கேற்பாளர்களின் ஆதரவைப் பொறுத்துமிருக்கிறது என்பது உண்மைதானே! நமக்கும், அறிமுகமற்ற ஓர் உலகத்தை அறிந்து கொள்ளும் வாய்ப்பும் கிடைக்கிறதல்லவா?

Monday, May 03, 2010

60 கவிதைகள் - புன்னகை இதழ்

புன்னகை கவிதை இதழின் அறுபதாவது வெளியீட்டில் பிரசுரமாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட கவிஞர்களின் பட்டியல் இங்கே...

01. கணேசகுமாரன்
02. அன்பாதவன்
03. நா.விச்வநாதன்
04. சம்யுக்தா
05. பா.ராஜா
06. மு.முருகேஷ்
07. உழவன்
08. மௌனம் ரமேசு
09. மகிழ்நன்
10. அதங்கோடு அனிஷ்குமார்
11. பொன்.குமார்
12. மருதம்.ஷப.கெஜலட்சுமி
13. ம.ஜெயப்பிரகாஷ்வேல்
14. வே.மு.பொதியவெற்பன்
15. ஜனமித்ரன்
16. உயிரோடை லாவண்யா
17. கார்க்கோ
18. ச.மோகனராசு
19. அருள்குமார்
20. துரை.மூர்த்தி
21. கவின்
22. புலியூர் முருகேசன்
23. கணியன் செல்வராஜ்
24. ஸ்ரீநிவாஸ் பிரபு
25. ப.சுடலைமணி
26. பிரபாவரசன்
27. சூர்யநிலா
28. கோசின்ரா
29. சு.சுபமுகி
30. சுப்ரபாரதிமணியன்
31. பி.மணிகண்டன்
32. ஒளியவன்
33. வா.மு.கோமு
34. அருணா
35. லதாமகன்
36. ந.பெரியசாமி
37. சிவகுமார்
38. அமல்.ஜான்
39. ஆ.முத்துராமலிங்கம்
40. ராமலக்ஷ்மி
41. சேரல்
42. பொன்.வாசுதேவன்
43. வீரகரன் மாதேஷ்
44. ஸ்ரீமதி
45. சி.அதிரதன்
46. பொ.செந்திலரசு
47. சித்தன்
48. ச்.முத்துவேல்
49. ச.கோபிநாத்
50. சகாரா தென்றல்
51. வா.மணிகண்டன்
52. கென்
53. காயத்ரி
54. லதாமகன்
55. நிலாரசிகன்
56. நிலவின் மகள்
57. உமாசக்தி

சிலர் ஏற்கனவே இலக்கிய வட்டத்தில் பிரபலமானவர்கள்; சிலர் வலைப்பூக்களில் உலவுகின்ற்வர்கள்; மற்றவர்கள் எனக்கு அறிமுகமற்றவர்கள்; சிலரின் ஒன்றுக்கு மேற்பட்ட கவிதைகள் வெளிவந்திருப்பதால் எண்ணிக்கை அறுபதைத் தொடவில்லை. கவிஞர்கள் அனைவருக்கும் வாழ்த்துகள்!

Friday, April 30, 2010

புன்னகை கவிதை இதழ்

'புன்னகை' கவிதை இதழின் அறுபதாவது வெளியீட்டுக்காக அறுபது கவிஞர்களின் கவிதைகளைத் தொகுத்து வெளியிட இருப்பதாக நண்பர் 'நிலாரசிகன்' வலைப்பூ மூலமாகத் தெரிந்து கொண்டேன். கவிஞர் அம்சப்ரியா ஆசிரியராகச் செயல்படும் இவ்விதழுக்கு என் கவிதையை அனுப்பி இருந்தேன். அக்கவிதை தேர்வு செய்யப்பட்டு ஏப்ரல் 2010 இதழில் வெளிவந்திருக்கிறது. அறுபது கவிஞர்களில் ஒருவனாகத் தேர்வானது குறித்து மகிழ்ச்சி. தகவல் அளித்த நண்பர் நிலாரசிகனுக்கும், தேர்வு செய்த ஆசிரியர் குழுவுக்கும் நன்றிகள்.

பிரசுரிக்கப்பட்ட கவிதை : அப்படியே

-ப்ரியமுடன்
சேரல்

Wednesday, April 28, 2010

நிர்வாணம்




நிர்வாணியாய்த் திரிந்தவனுக்குக்
கவலைகள்
என்றெதுவுமில்லை

பின்
நிர்வாணம் குறித்துக்
கவலை வந்தது

நிர்வாணத்தை இழந்தவனுக்கு
ஆயிரம் கவலைகளோடு
சேர்ந்துகொண்டன,
இழந்ததை
அறிவதன் மீதானதும்,
அடைவதன் மீதானதும்

தன்னியல்பு திரிந்த
கவலையில்
ஆடைகட்குள் ஒளிந்தே கிடக்கிறது
நிர்வாணம்

Monday, April 19, 2010

அலைநீளம்

கடலற்ற
கடலினடியே
கடலின் கரையாகிறது

உள்ளங்கையோடும்
ரேகைகள் போலும்
ஒன்றுபோலிருப்பதில்லை
மாறி மாறி
எல்லை போடும் கடலலைகள்

அலைநீளம்
நிர்ணயிக்கிறது
கடலின் பரப்பை
அல்லது
கரையின் பரப்பை

ஒத்தத் தொலைவிருந்து
எல்லாம் ரசித்திருக்கும்
வானம் பார்த்துக் கிடக்கின்றன
கடலும்,
கடலாகக்கூடும்
கரையும்

Thursday, April 08, 2010

மீதமிருக்கும் இரவு

உடலைச் சதுரமாக்கி
உள்நுழையும் காற்றுக்கெனத்
திறந்திருந்த
சாளரத்தின் வழி புகுந்து
படர்கிறது சிகரெட் புகை

அது,
பின்னிரவின் அமைதியின்
பிடியில் சிக்குண்டு
தூக்கமற்று அழும்
எவனோ ஒருவனின்
மன இடுக்குகளில் நுழைந்து
சாந்தப்படுத்துகிறது

மூச்சுத்திணறத்திணற
விழித்தெழுந்து
வியர்க்கிறேன்

தூக்கமற்ற வெளியில்
மிதந்து போய்
இன்னொரு சிகரெட்
பற்றவைக்கிறான் அவன்

தொற்றுநோயெனப்
பற்றிவிட்ட விழிப்பின் பிடியில்
எப்படிக் கழிப்பதென்ற
திட்டமிடலிலேயே
கழிக்கிறேன்
என் மீதியிரவை

Friday, March 19, 2010

இடைவேளை

எப்போதும் அதிகாலையில் அரைத்தூக்கத்தில் எழுகையில் திறந்திருக்கும் குளியலறைக் கதவு, திடீரென்று ஒரு நாள் உட்புறமாக தாளிட்டிருக்கையில் தான் அழுத்தமாக நினைவுக்கு வந்தது தனக்குத் திருமணமானது என்பதாக நண்பனொருவன் சொன்னான். கேட்கும்போது வேடிக்கையாக இருந்தது. அதே போல வேறு சில சந்தர்ப்பங்களை இந்த ஒரு மாதமாக உணர நேர்ந்தது.

திருமண ஏற்பாடுகள் தொடங்கிய நாளில் இருந்தே இந்த இடைவேளையை நானே உருவாக்கிக் கொண்டேன். வாசிப்பிலிருந்தும், பதிவிடுவதிலிருந்தும், பொதுவாகச் சொல்வதென்றால் எதையும் எழுதுவதிலிருந்தும் நானாக எடுத்துக்கொண்ட இந்த இடைவேளை வாழ்க்கையின் சில மாறுதல்களை பூரணமாக நுகர ஏதுவாயிருந்தது. அலுவலகத்திலிருந்து பதினைந்து நாட்கள் விலகி இருந்ததும் கூட நன்றாகவே இருந்தது. நன்றாகத்தானே இருக்கும் :)

இடைவேளைகள் தேவையாய் இருக்கின்றன; புத்துணர்வளிக்கின்றன; ஓய்வோடு, சாவகாசமாய்த் தன்னாய்வு செய்து கொள்ளச் சமயமளிக்கின்றன. இதோ இப்படி சில வார்த்தைகள் எழுதவும் வாய்ப்பேற்படுத்திக் கொடுக்கின்றன.

இடைவேளை எனும்போதே அடுத்த பகுதி இருக்கிறது என்பதைப் புரிந்துகொள்ள முடிகிறது. அடுத்த பகுதிக்காகத் தயாராகிறேன்.

-ப்ரியமுடன்
சேரல்

Monday, March 08, 2010

இன்னொரு மழை

நனைவேனென்று
அடம்பிடிக்கும்
குழந்தையின்
முகம் நனைக்கவே
அவ்வப்போது பெய்துவிடுகிறது
செல்லமழை
மேகத்திடமிருந்தோ
தாயிடமிருந்தோ

Thursday, March 04, 2010

அந்நியனின் குறிப்புகள்

பூக்களை எரித்த
சாம்பலை
உண்டு கொழுக்கின்றன
பட்டாம்பூச்சிகள்

பிள்ளைக்கறி விற்கும்
உணவகத்தில்
தலைக்கறி வேண்டுமென்கிறாள்
நிறைமாத சூலியொருத்தி

குருதியொழுகும்
சதைத்துண்டினை
ருசி பார்க்கும் வேகத்தில்
கவ்விப் பறக்கின்றன
வெள்ளைப்புறாக்கள்

விளையாடிக் கொண்டிருக்கும்
ரோஜாச் செடிகளைக்
கற்பழிக்கும் முடிவோடு
வேர் பிடுங்கி வெளிவந்து
காத்திருக்கின்றன
சில பட்ட மரங்கள்

இன்னும் உயிர் பிரிந்துவிடாத
சாது ஒருவனின்
சிதைந்த உடலை
மழைக்காலத்துக்கென
இழுத்துச் செல்கின்றன
சிற்றெறும்புகள்

மேலும்
இந்த நகரத்தில்,

பதிலுக்குப் புன்னகைக்க மறுப்பதோடு
முறைத்துப் பார்க்கவும் செய்கிறார்கள்,
அப்படியே போதிக்கப்பட்ட
குழந்தைகள்

Wednesday, February 10, 2010

அப்படியே

அப்படியே இருப்பது
சௌகரியம் என்றாலும்
எப்போதும் வாய்த்துவிடுவதில்லை

காய்ந்துகிடக்கும்
தார்ச்சாலைகளை
நக்கி நக்கி ஊர்ந்துபோகும்
வெயில் நாயைத்
துரத்தியடித்துப்
பெய்துவிடுகிறது மழை

மழை நனைத்த
எதுவும்
அதுவாகவே இருப்பதில்லை...

ஆனாலும்
மழையில்
உடைந்து விழும்
நீரின் ஒவ்வொரு துண்டும்
இருந்து விடுகிறது
நீராகவே

Friday, January 22, 2010

ஞானம்

ஈரமேறிப்போன
மார்கழியிரவொன்றில்
வெதுவெதுப்புக்காகத்
தேர்ந்திருக்கலாம்
மாடிப்படிகளை

எதிர்பாராத
என் வருகையில்
வெடுக்கென்று பிடுங்கிய
தூக்கத்தின் மிச்சத்தைத்
தூக்கிச்செல்கிறதொரு நாய்
மருட்சியுடன்

இருளைத் துளைத்து
நிகழ்ந்திருக்க வேண்டாம்
இப்பின்னிரவிலென் வருகை

Thursday, January 07, 2010

மீள் சிறகுகள்

வேறு கவனமெதையும்
மிகக்கவனமாகத் தவிர்த்த
ஓய்வுகளற்ற
நெடியவிரு பயணங்களினூடே
எதேச்சையாக எனும்படியாகத்தான்
எதிர்ப்பட்டுக்கொண்டோம்
ஒரு பறவையும்
நானும்

வளையலகு கொண்டதொரு
பறவையின் சிறகுகளும்,
விரிந்த கண்களுடைய
யாத்ரீகனொருவனின்
கால்விரல்களும்,
பிறிதொரு நாள்
வந்தமர்ந்து
இளைப்பாறக்கூடும்
இருவேறு பயணக்குறிப்புகளில்

-சேரல்

உரையாடல் கவிதைப்போட்டிக்காக.....

போட்டிக்கான எல்லாக் கவிதைகளும் இங்கே....