புத்தகம்

புத்தகங்கள் பற்றிய பார்வைகளைப் பதியும் எங்கள் வலைப்பூ - http://puththakam.blogspot.com/

Monday, November 14, 2005

பச்சை

மழைச்சாரல் புகுந்து
மட்கிப்போன
பழைய புகைப்படத்தில்
பாட்டனைத் தேடும்
பேரனாய்த்
தேடிக்கொண்டிருக்கிறேன்
உன்னை என்னில்...!

வெளிப்படையான
நம் பிரிவின்
நோக்கம்
ஊருக்கெல்லாம்
நியாயப்படுத்தப்பட்டே
நிற்கிறது.....!

'அம்மா மூச்சா வருது'
சொல்வதற்குள்
வாய் மூடப்பட்டபோது
நிகழ்ந்தது
நம் பிரிவிற்கான
முதல் வெள்ளோட்டம்....!

உறுப்புகளை
மறைக்கச் சொன்ன
நாகரிகத்தின் கூறு,
உணர்வுகளையும்
மறைக்கச் சொன்ன போது,
நீண்டது
நமக்கிடையேயான
இடைவெளி....!

நிசப்தமான
நிலவுப்பொழுதுகளில்
ரகசியமாக மட்டுமே
நடந்தேறியது
நம் சந்திப்பு.....!

சமுதாயப்பட்டறையில்
கூர் தீட்டப்பட்ட
நாகரிக வாள்,
நம்மைப் பிணைத்த
கடைசி நூலிழையையும்
துண்டாடி ரசிக்கிறது...!

இதோ...
மனிதத்திரளில்
தன் முதல் காதலியைத் தேடும்
காதலனாய்த்
தேடிக் கொண்டிருக்கிறேன்
என்னை என்னில்.....!!

7 comments:

J S Gnanasekar said...

"உறுப்புகளை
மறைக்கச் சொன்ன
நாகரிகத்தின் கூறு,
உணர்வுகளையும்
மறைக்கச் சொன்ன போது,
நீண்டது
நமக்கிடையேயான
இடைவெளி....!"

கவிதையின் அர்த்தம் புரியாவிட்டாலும், மேல் சொன்ன வரிகள் எனக்கு மிகவும் பிடித்திருந்தன.

அது சரி, இக்கவிதையில் இடம்பெறும் 'உன்னை', யாரைக் குறிக்கிறது? மனச்சாட்சியையா? குழந்தைப் பருவத்தையா?

சேரலாதன் பாலசுப்பிரமணியன் said...

நானாகிய என்னை....!

J S Gnanasekar said...

கிட்டத்தட்ட கல்வெட்டோட "காணாமல் போனவர் பற்றிய அறிவிப்பு" போலன்னு சொல்லு?

என்ன "நானாகிய என்னை", "சரியா... தவறா" அப்புடின்னு சின்னப்புள்ளதனமா?. தெளிவா சொல்லு. நான் வடிவேலு இல்ல. நீ பார்த்திபன் இல்ல.

-ஞானசேகர்

J S Gnanasekar said...

"மழைச்சாரல் புகுந்து
மட்கிப்போன
பழைய புகைப்படத்தில்
பாட்டனைத் தேடும்
பேரனாய்த்
தேடிக்கொண்டிருக்கிறேன்"

இவ்வரிகளுக்குச் சொந்தக்காரர் சேரலாதனா? வைரமுத்தா?

-ஞானசேகர்

சேரலாதன் பாலசுப்பிரமணியன் said...

வைரமுத்து என்பதில் எள்ளளவும் ஐயமில்லை! இதை ஏற்கனவே என் தோழி ஒருவர் சுட்டிக்காட்டிவிட்டார். வில்லோடு வா நிலவே புத்தகத்தின் முகவுரையில் இந்த வரிகளைப் பயன்படுத்தி இருப்பார் வைரமுத்து. இதை எழுதிய பொழுது இதை நான் உணரவில்லை என்பதே உண்மை! எனக்கும் வைரமுத்துவுக்கும் ஒரே கற்பனை என்று சொல்ல வரவில்லை. எப்போதோ படித்த வரிகள் என்னை அறியாமல் இடம்பெற்றுவிட்டன என்று சொல்கிறேன் (உண்மையாக...!!!).

J S Gnanasekar said...

உங்களின் profileல் சொல்லப்பட்ட புத்தகங்களில் 'கள்ளிக்காடு இதிகாசம்' மட்டுமே நான் படித்தது. "வில்லோடு வா நிலவே" கேள்விப்பட்டதே இல்லை. இம்முறை திருச்சி சென்றிருந்தபோது, விசாரித்துப் பார்த்தால், வைரமுத்து எழுதியது!

சேரல் சொன்னா நல்லாத்தான் இருக்குமுன்னு வாங்கியாந்துட்டேன். நேத்து ரயில் பயணத்துல ஒரே மூச்சுல பாதி படிச்சாச்சு. இன்னும் ரெண்டு நாளைக்குள்ள முடிச்சுருவேன். கதையோட நாயகன் பேரு, சேரலாதன்னு இருந்ததால கொஞ்சம் சந்தேகம் வந்துச்சு. ஆனால், 'தெருவாசக'த்திற்குப் பிறகு நான் படித்த உருப்படியான தமிழ் புத்தகம் இதுதான்.

இதையே ரசிச்சி ரசிச்சிப் படிச்சிக்கிட்டே வந்ததால, எதிர் இருக்கை இளமையுடன் கடைசிவரை பேச முயலவே இல்லை. வைரமுத்து சொன்னமாதிரி, "நமக்கு எதுக்கு 'வம்பு'?".

-ஞானசேகர்

சேரலாதன் பாலசுப்பிரமணியன் said...

Double meaaningla vilaiyaaduriyedaa?