புத்தகம்

புத்தகங்கள் பற்றிய பார்வைகளைப் பதியும் எங்கள் வலைப்பூ - http://puththakam.blogspot.com/

Saturday, June 13, 2009

இல்லாத முகவரிகள் - 1


















ழைய நாட்குறிப்புகளைப் புரட்டிப் படிப்பது போல மனது நேற்றிரவு அலை பாய்ந்து கொண்டிருந்தது. கடந்த கால நாளேட்டின் தாள்கள் படபடக்கும் ஓசை தெளிவாகக் கேட்ட படி இருந்தது. கூடவே ஏதேதோ ஓசைகள், இரவு நேரப் பேருந்துகளின் சத்தம், கடல் எழுந்து விழும் சத்தம், மழையின் துளிகள், தேங்கிய தண்ணீரில் விழும் சத்தம், எல்லாம் சேர்ந்து என்னை இராண்டாண்டுகள் பின்னோக்கி இழுத்துச் சென்று நிறுத்தின.

2007 ஏப்ரல் மாதம். வெயில் பூரணமாகத் தன் ஆதிக்கத்தை செலுத்தத்தொடங்கிய காலம். வெகு நாட்களாக நண்பனும் நானும் திட்டமிட்டிருந்த கன்னியாகுமரியில் சூரிய உதயம் பார்க்க வேண்டும் என்ற ஆவலை நடைமுறைப்படுத்துவதற்கான சாத்தியம் ஏற்பட்ட காலம். கொஞ்சம் இங்கே சுய புராணம் அவசியமாகிறது. அப்போது நான் ஐதராபாதில் பணி புரிந்து கொண்டிருந்தேன். நண்பன் இருந்தது பூனேயில். இந்தப் பயணத்தின் முன்பு வரை, நான் தமிழக வரைபடத்தில் மதுரைக்குக் கீழே பயணித்ததே இல்லை. ஆனால் நண்பன் ஏற்கனவே கன்னியாகுமரியில் கடலாடி இருந்தான். அவன் மீண்டும் என்னுடன் வரச் சம்மதித்தது ஒரு மாதிரியான பெருந்தன்மை என்றே நான் கொண்டேன்.

கன்னியாகுமரி என்ற அளவோடு இல்லாமல் முடிந்தவரை சுற்றி இருக்கும் பகுதிகளையும் இப்பயணத்தில் வளைத்துக் கட்டிவிட வேண்டும் என்று பட்டியலிட்டுப் புறப்பட்டன கடல் குடிக்கத் தயாரான இரு சிறு எறும்புகள். புறப்படும் முன் சில சட்ட திட்டங்களுக்கு எங்களை நாங்களே ஆட்படுத்திக் கொண்டோம். முதல் கட்டுப்பாடு அலைபேசி எடுத்துப்போவதில்லை என்பது. இருவருக்கும் அதில் மிகச் சந்தோஷம். குடும்பத்துக்கு மட்டும் தினமொரு முறை ஏதாவது பொது தொலைபேசி மூலம், உயிரோடிருப்பதை அறிவித்துக் கொள்ளலாம் என்று முடிவு.

செருப்பு அணிந்து போகக்கூடாது என்று முடிவு செய்து பின், 'ரொம்ப ஓவரா இருக்குடா' என்று நான் சொன்ன பிறகு அதைக் கைவிட்டோம். இருவரும் அவரவர் சொந்த ஊர்களை அடைந்து இரு தினங்களுக்குப் பிறகு, இருவரும் கல்லூரிப்படிப்பை முடித்த திருச்சியில் சந்தித்துப் பயணத்தைத் தொடங்குவதாக முடிவானது. நானும் வீடு சேர்ந்தேன். குடும்பத்தைப் பொறுத்த வரையில் நண்பர்கள் ஊர் சுற்றப் போகிறோம் என்பது மட்டும் தெரியும். எத்தனை பேர், எங்கே போகிறோம், எங்கே தங்குவோம், என்ன திட்டம் எதுவும் தெரியாது. கேட்கவும் இல்லை. எல்லாம் ஒரு நம்பிக்கைதான்.

புறப்படும் முன் நண்பனுடன் பேசி, எங்கே சந்திப்பதென்று முடிவானது. திருச்சி மாரீஸ் திரையரங்கில் 'பருத்திவீரன்' திரைப்படம் பார்த்து விட்டு நள்ளிரவுக்கு மேல் பயணத்தைத் தொடங்கினால் முதல் புள்ளியான 'அர்ச்சுனாபுரத்தை' அடைய பொழுது விடிந்துவிடும் என்று தீர்மானித்தோம். நான் முன்பே அத்திரைப்படத்தைப் பார்த்துவிட்டேன். சரி, மீண்டும் ஒருமுறை நண்பனுடன் பார்க்கலாம் என்று ஒரு திங்கட்கிழமை மதியம் வீட்டிலிருந்து புறப்பட்டேன். ஐந்து மணி நேரப்பயணத்துக்குப் பிறகு மாரீஸ் திரையரங்கின் வாசலை அடைந்தேன். திரைப்படம் தொடங்கி அரை மணி ஆகியிருக்கும். தனியாக மீண்டும் போய்ப் பார்ப்பதில் எனக்கு விருப்பமில்லை. காட்சி முடியும் வரை வெளியில் காத்திருக்கலாம் என்று காத்திருந்தேன். கோட்டைவாசல், தெப்பக்குளம் வரை ஒரு நடை போய் வந்தேன். சினிமா போஸ்டர்கள் வாசித்தேன். சத்திரம் பேருந்து நிலையத்தைச் சுற்றி வந்தேன். காட்சி முடியும் நேரத்துக்கு மீண்டும் மாரீஸ் வாசலுக்கு வந்தேன். காட்சி முடிந்து வெளியில் வருவோரை ஒவ்வொருவர் முகங்களாக ஊடுருவிப் பார்த்துக் கொண்டிருந்தேன். வெளிச்சம் வேறு குறைவாகத்தான் இருந்தது.

ஒவ்வொருவராக ஒவ்வொருவராக கடைசி ஆள் வரை வெளியேறிவிட்டார்கள். எனக்குக் குழப்பமாக் இருந்தது. ஒரு வேளை வழியில் ஏதாவது பிரச்சினையா என்று யோசித்தபடி படிக்கட்டில் உட்கார்ந்திருந்தேன். திரையரங்கின் வெளியிலிருந்து வேகமாக நடந்து வந்தான் நண்பன். 'வீட்டில் ஒரு சிறு வேலை. நீ படம் பார்த்தியா?' என்றான். நான் அவனுக்குக் கதை சொன்னேன். 'வீட்டுக்கு ஃபோன் பண்ணியிருக்கலாம்ல?' என்றான். அவன் வீட்டு எண்ணைக் குறித்துக் கொள்ளாமல் வந்திருந்தது அப்போதுதான் நினைவுக்கு வந்தது. அவன் அலைபேசி எண்ணும் என் நினைவில் இல்லை. சிரித்துக் கொண்டே இரவு உணவை முடித்து, திருச்சி மத்திய பேருந்து நிலையம் அடைந்தோம்.

அவன்தான் அப்போது எனக்கு வழிகாட்டி. மதுரை போய், அங்கிருந்து விருதுநகர் அடைந்து, பின் ஸ்ரீவில்லிபுத்தூர் போய், அர்ச்சுனாபுரத்துக்கு வழி கேட்டுக்கொள்ளலாம் என்றான். அவன் கோயமுத்தூர் போய், தூத்துக்குடி வந்து, தென்காசி, தேனி வழியாக ராமநாதபுரம் போய் விடலாம் என்று சொல்லி இருந்தாலும் நான் சரி என்றிருப்பேன். அப்போது எனக்குப் பல இடங்கள் பழக்கமில்லாதவை. பயணத்தின் சுவை அறிந்தவன் என்றாலும், தென் தமிழகத்தில் சுற்றியதில்லை. வரைபட அளவில் ஓரளவுக்குப் பழக்கமாகி இருந்தன.

ஆளுக்குக் கையில் ஒரு பை வைத்திருந்தோம். உள்ளே இரண்டு நாட்களுக்கான் உள்ளாடைகள், ஒரு நாளுக்கான மேலாடை, புதிதாக வாங்கி மிகுந்த காதலுடன் பத்திரப்படுத்தி இருக்கும் டிஜிட்டல் கேமரா, அப்புறம் எடை குறைவான அன்றாட உபயோகப் பொருட்கள் சில மட்டும் இருந்தன. திருச்சி தமிழ்நாட்டின் இதயம் என்பதால் வட மாவட்டங்களிலிருந்து, தென் மாவட்டங்களுக்குப் போகும் பெரும்பாலான பேருந்துகள் இதன் வழியாகத்தான் போகின்றன. அதனால் மதுரைக்குச் சராசரியாக மூன்று நான்கு நிமிடங்களுக்கு ஒரு பேருந்து இருந்து கொண்டே இருக்கும். இரவு பத்து மணி சுமாருக்கு, எந்தப் பேருந்தில் ஏறுவதென்று யோசித்தபடி சுக்கு காபி குடித்துக் கொண்டிருந்தோம். நேரடியாக மதுரைக்குப் போகும் பேருந்தில் ஏறினால்.... ஒரு மணிக்கு மதுரை, பின் அங்கிருந்து விருது நகருக்கு அந்த நேரத்தில் பேருந்து இருக்குமா என்று தெரியாது. அப்படியே இருந்தாலும் பொழுது விடிவதற்குள் அர்ச்சுனாபுரத்தை அடைவது போலாகிவிடும். அது வேண்டாம் என்று இருவரும் சிந்தித்து ஒரு சிறப்பான திட்டத்தைச் செயல்படுத்தினோம்.

மதுரை பேருந்துகளுக்கு அருகிலேயே திண்டுக்கல் செல்லும் பேருந்துகள் நின்றிருந்தன. வீடியோ இல்லாத பேருந்து ஒன்றில் ஏறிக்கொண்டோம். தென் தமிழகம் பார்க்கும் என் நீண்ட நாள் கனவை நினைவாக்கும் பயணம் தொடங்கியது. இருவரும் கொஞ்சம் கண்ணயர்ந்தோம்.

7 comments:

Bee'morgan said...

ரொம்ப சுவாரஸ்யமா ஆரம்பிச்சுருக்கீங்க.. :) அடுத்தடுத்த பதிவுகளுக்காக ஆவலுடன் காத்திருக்கிறேன்..

மயாதி said...

மீண்டும் வாசிப்போம்..

ச.பிரேம்குமார் said...

பயணக்கட்டுரையா? சுவாரசியமான ஆரம்பம். தொடர்ந்து வாசிக்க காத்திருக்கிறேன் :)

பிரவின்ஸ்கா said...

நல்லா இருக்குங்க .
அடுத்த பதிவு எப்ப வருங்க ?

-ப்ரியமுடன்
பிரவின்ஸ்கா

ப்ரியமுடன் வசந்த் said...

weighting for next post

யாத்ரா said...

உங்கள் பயண எழுத்து அருமை சேரல்.

சேரலாதன் பாலசுப்பிரமணியன் said...

நன்றி நண்பர்களே!

அடுத்தப் பதிவுடன் இன்று வருகிறேன்.

-ப்ரியமுடன்
சேரல்